Monday, 30 September 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா


பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.”என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.




sep 30 jayalalitha
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஏதுவாக, மாற்றுத் திறனாளிகளுக்கென தனி இயக்ககம் ஒன்றை 1993 ஆம் ஆண்டு துவக்கியதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையையும் வெளியிடச் செய்தேன்.


2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இதனைத் தொடர்ந்து, மன வளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக உடல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான மாதாந்திர உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது; அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது;



ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை இரட்டிப்பாக்கப்பட்டது; பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கான உதவித் தொகை 100 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டது என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு சலுகைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.



அண்மையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் சலுகையை மாற்றுத் திறனாளிகளின் துணைவியாருக்கு விரிவுபடுத்துதல்; மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கான 14.5 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியினை முற்றிலும் நீக்குதல்; 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகளை வழங்குதல்; பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியினை புதுப்பித்தல்; எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்கக் கூடிய கண்ணாடியை வழங்குதல்; 6 வயதுக்குட்பட்ட பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆரம்ப பயிற்சி நிலையங்கள் அமைத்தல்; பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கென மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்து வழங்கப்படும் கடனுக்கான வட்டியை அரசே செலுத்துதல் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளேன்.



பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆணையிட்டிருந்தேன். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்கள்.


இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.



இதன்படி, பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.



இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.


தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?


காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக்
கொண்டிருக்கின்றன.



இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..




sep 30 health eyes
 

கண் எரிச்சலைப் போக்க


கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.


தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.


புத்துணர்ச்சி பெற


வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.


வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.


கருவளையம் போக்க


வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.


கண்கள் குளிர்ச்சி பெற



உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.


சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.


வசீகர கண்கள்


கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.


ப்ளீச் வேண்டாமே


முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.


உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.

பிள்ளையார் சுழி! காரணம்!





எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில் லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் சரி, கடை சாமான் லிஸ்டானாலும் சரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம்.  எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்து தான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது  Written proof எழுத்து மூல நிரூபணமாகவே பிள்ளையார் சுழியில் தெரிகிறது.

பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம். பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’ போடு கிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே? சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே  அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும்,  நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வ ட்ட வடிவந்தானே?

இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீக்ஷையில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன் யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’ என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸைஃபர் பண் ணிக்கொண்டு வருகிறவனை, ‘‘என்னடா சுழி!’’ என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப்  பூர்ணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’ பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.

வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இர ண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு  நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight   forward என்கிறார்கள். குணம், குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான். ‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ, உ, ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்‘காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள்  இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம  ஸம்ஹாரம்; ஈஸ்வரன்.

த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம்  என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ, உ, ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உமஅ என்று இருக்கின்றன  அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’ என்பது முதல் எழுத்தாயிரு ப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல் லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ, உ, ம வில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது.  ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன் றுகிறது. அதாவது, அவர் ‘’தாயைப் போலப் பிள்ளை’’ மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற  ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’இவற்றையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எ ல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்து கொண்டு ‘உ’ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

ப்ரணவத்தில் ‘உ’விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’என்றே  பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப் பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ‘‘சுக்லாம்பரதரம்  விஷ்ணும்’’ என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’என்பது சிவசக்தி புத்ரனை விஷ்ணுவோடும்  ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ண வத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது! வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத் தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக (axis ஆக) நேரான (straight ஆன) ஒன்று இருந்தாக வேண்டும்.

விஷ்ணு தன் விரலையே நேராக  நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயு தத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப்  பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் சரி (இது ஒளி)  விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட் டியானாலும் சரி (இது ஒலி), இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியி ருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக் கொண்டிருக் கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line  ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும்.

வட்டமாகச் சுற்றுகிற  ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும்  போடுகிறோம். எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட் ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்சாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார்  சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவசக்தி ஸ்வரூபமான நாதபிந்துக்களாகக்கூடச் சொல் லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸூக்ஷ்மமான விஷயம்.

ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு,  அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று  என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம  பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்து தான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.

கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ‘‘பெரும்பாரக்கோடும்’’, ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே’’ என்றெல்லாம் அவ்வைப் பாட்டி  சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக் கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில்  கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப்  பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத் தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!’’

காஞ்சி பரமாச்சார்யார் என்ற ‘தெய்வத்தின் குரல்’   



தவிட்டு எண்ணெயிலும் வாகனங்கள் ஓட்டலாம்...



கண்டுபிடிப்பின் பெயர் : தவிட்டு எண்ணெய் எரிபொருள்


கண்டுபிடிப்பாளர்களின் பெயர் : மகேஷ் ராஜா, ப்ரவீன், வெற்றிவேல், விக்னேஷ்வரன்


கல்லூரி : அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருக்குவளை
கண்டுபிடிப்பின் பயன் : எரிபொருள் சிக்கனப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது


ரு குறிப்பிட்ட விகிதத்தில் தவிட்டு எண்ணெயை கலப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் டீசலுடன் கலந்து மாற்று எரிபொருளைக் கண்டறிந்துள்ளனர் திருக்குவளையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள்.


தற்சமயம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானது தான் தவிட்டு எண்ணெய். எதற்கும் பயன்படாத தவிட்டு எண்ணெயை டீசலுடன் கலப்புத் தொழில்நுட்பத்தில் சேர்த்து வாகனங்களை இயக்க முடிவு செய்தோம்.


பல அளவீடுகளில் முயன்று இறுதியில்,  80 சதவிகித தவிட்டு எண்ணெயுடன்  20 சதவிகிதம் டீசலைக் கலந்து சோதனை மேற்கொண்டோம். ஆய்வுக்காக உட்படுத்தப்பட்ட என்ஜின் நன்றாக இயங்கி எங்களுடைய ஆய்வு வெற்றிபெற்றது. தவிட்டு எண்ணெய் கொண்டு இயங்கும் வாகனத்தில் புகையின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தக் கலப்பு எரிபொருள் பயன்படுத்தும்போது, லிட்டர் ஒன்றுக்கு 28 முதல் 30 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்" என்கிறார் மாணவர் வெற்றிவேல்.


இந்தக் கலப்பு எரிபொருளை வாகனங்களில் பயன்படுத்தும் போது என்ஜினின் செயல் திறன் வேகம் அதிகரித்துள்ளது என்று ஆய்வின்போது, இந்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உளவு உலோகப் பட்டாம் பூச்சி..!


எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் உள்ள வான்பயண மின்னணுவியல் (Avionics) ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ‘தக்ஷா‘ என்ற குழுவினர்  ஆட்கள் இல்லாமலேயே பறக்கும் குட்டி விமானம் ஒன்றை  உருவாக்கியுள்ளனர்.

பெயரிடப்படாத இந்த ஆளில்லாத குட்டி விமானம், நிலஅளவீடுகள், விண்வெளி, புவியியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது, பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.8 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தை எளிதாக எந்தப் பகுதிக்கும் தூக்கிச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பு. விமானத்தின் அடிப்பாகத்தில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளன.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த விமானம், வானத்தில் பறந்தபடி எடுக்கும்  படங்கள், வீடியோக்களை லேப் டாப்பில் நாம் நேரடியாகப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இது, ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குப் பறந்து படம் பிடிக்கும் திறன் கொண்டது. பார்ப்பதற்கு மெகா சைஸ் பட்டாம் பூச்சி போல் உள்ளது.

2006-ஆம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்குகிற முயற்சியில் எங்களுடைய தக்ஷா குழு ஈடுபட ஆரம்பித்தது. விமானத்தை போர்க்காலங்களில் ராணுவத்திற்கு உதவும் வகையில்தான் முதலில் வடிவமைத்தோம். ஆனால், அதன்பிறகு மக்களுக்குப் பயன்படுகிற வகையில் மாற்றி வடிவமைத்தோம். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆளில்லா குட்டி விமானங்கள் அதிகளவு எடை கொண்டவையாக இருக்கும். ஆனால், நாங்கள் கண்டுபிடித்துள்ள விமானத்தின் எடை மிகவும் குறைவு.

மும்பை தாஜ் ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது, உள்ளே தீவிரவாதிகள் எங்கிருந்து தாக்குதல் நடத்துகின்றனர் என்று தெரியாமல், உள்ளே நுழைந்த நமது காவலர்கள் பலர் தீவிரவாதிகள் சுட்டதில் இறந்து போனார்கள். அதுபோன்ற நெருக்கடியான சமயங்களில் இந்தக் குட்டி விமானம் அபாரமாகக்  கைகொடுக்கும்.  இதன் மூலம் உயிர்ச்சேதத்தைத்  தவிர்க்கலாம்" என்கிறார் இணைப் பேராசிரியர் செந்தில்குமார்.

தக்ஷா குழுவினர் கண்டுபிடித்துள்ள இந்த விமானம் Low Intensity Confict என்ற அப்ளிகேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த விமானத்தை எல்லைப்பகுதி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் சிறிய பாகங்களாக எடுத்துச் சென்று, அரைமணி நேரத்தில் பொருத்தி குட்டி விமானத்தை உருவாக்கிட முடியும்.

ஆறு வருட கடின உழைப்பில் தக்ஷா குழுவினர் குட்டி விமானத்தை உருவாக்கியிருந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் அங்கமான ‘டார்பா‘ (DARPA – Defense Advanced Research Projects Agency) ஆளில்லாத விமானங்களுக்கான சர்வதேசப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. முதல் சுற்றில் 150 நாடுகளுடன் தக்ஷா குழுவினரும் போட்டியில் பங்குபெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்காவில் நடந்த போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்த தக்ஷா குழுவினரில் இரண்டு பேருக்கு மட்டுமே அமெரிக்காவிற்குச் செல்லும் விசா கிடைத்தது. ஐந்து பேர் இருந்த குழுவில் இரண்டு பேர் மட்டுமே, ஐந்து பேர் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டிய நிலையில், தன்னம்பிக்கையை இழக்காமல் செந்தில்குமார் தன் குழு ஆராய்ச்சி மாணவர் ஒருவருடன் அமெரிக்கா பறந்தார்.

இறுதிப் போட்டி அமெரிக்காவின்  ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்வார்ட் மிலிட்டரி பேஸில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கப்பற்படைக் குழு உட்பட மொத்தம் ஆறு நாடுகள் போட்டியில் பங்கு பெற்றன. மற்ற குழுவினர்களிடம் மூன்று முதல் ஐந்து குட்டி ஆளில்லா விமானங்கள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒரே ஒரு குட்டி விமானத்தைதான் கொண்டு சென்றோம். முதல் சுற்று அடர்ந்த காட்டுக்குள் நடந்தது. 150 அடிக்கு மேலே உயரம் உள்ள  மரங்களுக்கு மேல் பறந்து,  ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் நடக்கும் நிகழ்வுகளை எங்களுடன் இணைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் காண்பிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்துக் குழுவினரின் விமானங்களும் தொழில்நுட்பக் கோளாறினால் அடர்ந்த காட்டுக்குள் விழுந்து நொறுங்கியது. எங்களுடைய விமானம் காட்டுக்குள் நான்கு கிலோ மீட்டர் சென்ற பிறகு, தொடர்பில்லாமல் போனது. எங்களுடைய விமானமும் காட்டுக்குள் விழுந்து நொறுங்கி விட்டது என்று அங்குள்ள ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துவிட்டனர்.

ஆனால், தொடர்பு இல்லாமல் போனாலும் வானத்தில் மிதக்கும்படி செய்து வைத்திருந்த எங்களுடைய தொழில்நுட்பத்தை, அதிகாரிகளுக்கு விளக்கினோம். சொன்னது போலவே காட்டின் நான்காவது கிலோ மீட்டரில் மிதந்து கொண்டிருந்தது. அதுவே அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சார்ஜ் இல்லாமல் போனதால் விமானம் கீழே இறங்கும்போது, தரையில் வீழ்ந்து நொறுங்கியது. மறுநாள் எங்களுடைய விமானத்தை ஓட்டிக் காட்ட இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கையில் நொறுங்கிப் போன விமானத்தின் பாகங்கள் மட்டுமே இருந்தன. மனம் தளராமல் இரவோடு இரவாக 100 மைல் பயணம் செய்து விமானம் சரி செய்யத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரித்து, இரவு முழுக்க உழைத்து சேதமாகியிருந்த விமானத்தை சரி செய்தோம். மறுநாள் காலையில் ராணுவ அதிகாரிகள் சொன்ன இடத்தில் எங்களுடைய விமானம் எந்தத் தடையும் இல்லாமல் சென்று, அங்கு நடக்கின்ற நிகழ்வுகளை போட்டிக் குழுவினருக்குப் படம் பிடித்துக் காட்டியது. அப்போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை" என்று சிலிர்ப்புடன்  நினைவு கூர்கிறார் செந்தில்குமார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் ராணுவ நிறுவனமான ‘டார்பா‘விடம் இருந்து உலகின் மிகச்சிறந்த ஆளில்லாத குட்டி உளவு விமானம் என்று சான்றளித்து தக்ஷா குழுவினருக்கு கடிதம் வந்திருக்கிறது. மேலும் தக்ஷா குழுவினரின் விமானத்தை அமெரிக்காவிற்குத் தரும்படி கோரிக்கையும் விடப்பட்டது. ஆனால், இது என் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று சொல்லி அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் செந்தில்குமார்.

எம்.ஐ.டி. கல்லூரியின் முன்னாள் மாணவரான அப்துல் கலாம், இந்த விமானத்தை இயக்கிப் பார்த்து பாராட்டியுள்ளார், மேலும் நாட்டின் பயன்பாட்டிற்கு விரைவில் இதனை அர்ப்பணிக்கும்படி தக்ஷா குழுவினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வளர்ந்த நாடான அமெரிக்காவில் UAV-(Unnamed ariel Vechicle ) ஆளில்லாத குட்டி விமானங்களின் பயன்பாடு அதிகமான அளவில் உள்ளது. ஆனால், நம்மூரில் இது போன்ற விமானங்களை உருவாக்குகின்ற முயற்சியில்தான் இருக்கிறோம்.  அதற்குத் தேவையான ஆய்வுக்கூடங்கள், வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் சிறந்த கண்டுபிடிப்புகளை நம்மால் உருவாக்க முடியும்" என்கிறார் இணைப் பேராசிரியர் செந்தில்குமார்.


கிரானைட் முறைகேட்டைக் கண்டறிய உதவியது

மதுரை மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக கிரானைட் கற்களை அளவிடும் பணி நடந்தது. குவாரியில் உள்ள ஸ்டாக் யார்டு பகுதியில் ஆயிரக்கணக்கில் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மாவட்ட நிர்வாகத்தினால் இந்தக் குட்டி விமானம் வரவழைக்கப்பட்டு, கிரானைட் குவாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த விமானம் குவாரியில் உள்ள கிரானைட் கற்களால் ஆன ரகசிய அறைகள், பதுங்கு குழிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை துல்லியமாகப் படம் பிடித்து அதிகாரிகளின் ஆய்விற்கு மிகவும் உதவியிருக்கிறது.

மேலும் திருவண்ணாமலையில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில் மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல் சேகரன்  நினைவு நாள் விழாவில் வானில் பறந்து பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை வரலாற்றிலேயே காவல்துறைக் கண்காணிப்பில் ஆளில்லா விமானம் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.



எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

குறிப்பிட்ட அளவு பூச்சிக்கொல்லி மருந்தை விமானத்தில் வைத்து பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிர்கள் மீது பத்து நிமிடங்களில் தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசன முறையில் எந்தப் பகுதியில் தண்ணீர் செல்லவில்லை என்று விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் அறிந்து அதன் மூலம் துல்லியமாக சொட்டுநீர்ப் பாய்ச்சலாம். தீ விபத்து ஏற்படும்போது, ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு, விமானத்தை சற்று உயரமாக பறக்கச் செய்து தீயை அணைக்கும் ரசாயனப் பொடியை விமானத்திலிருந்து தூவி  தீயை முழுமையாக அணைக்க முடியும்.

புரட்டாசிப் பட்டம் - என்ன விதைக்கலாம்? எவ்வளவு அறுக்கலாம்?


தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை  சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ...


பருத்தி: வெள்ளைத் தங்கம்


புரட்டாசிப் பட்டத்திற்கு எல்.ஆர்.ஏ. 5166, கே 11, கே.சி. 2, எஸ்.பி.வி.ஆர். 2 போன்ற பருத்தி ரகங்களைப் பயிரிடலாம். பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக கீறல் தோன்றி, ஓரிரு நாட்களில் முழுவதும் மலர்ந்து வெடிப்பதே அறுவடைக்கான அறிகுறியாகும். விதைத்த  120 நாட்களுக்குப் பின் வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை காலை மற்றும் மாலை நேரங்களில் பஞ்சை கைகளால் அறுவடை செய்ய வேண்டும். ரகங்களைப் பொருத்து மகசூல் அளவு மாறுபடும்.


துவரை: ஏற்றம் தரும் நாற்று நடவு


துவரை, மிதமான வெப்பம் மற்றும் குறைந்த ஈரப்பதத்தில் வளரக்கூடியவை. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் குறுமண் நிலம் துவரை சாகுபடிக்கு ஏற்றது. புரட்டாசிப் பட்டத்தில் கோ 6, வம்பன் 1, வம்பன் 2, கோ(சிபி) 7  போன்ற துவரை ரகங்களைப் பயிரிடலாம். துவரை சாகுபடியில் விதைப்பு முறையை விட, நாற்று நடவு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம். 150 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். 80 சதவிகிதக் காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் காய்களை தனியாகவோ அல்லது முழு செடியாகவோ அறுவடை செய்து வெயிலில் உலர்த்தி விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.


அவரை: அள்ளலாம் மகசூல்


அவரையில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று, செடியில் காய்ப்பது (குத்து அவரை), மற்றொன்று கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை). பந்தல் ரகத்தை பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 10 அடியும், குத்து ரகத்தைப் பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 1.5 அடியும் இடைவெளி விட வேண்டும். பந்தல் அமைத்து சாகுபடி செய்யும்போது, கொடி, பந்தலை அடைந்தவுடன் நுனிக்குருத்தைக் கிள்ளிவிட வேண்டும். அவரை வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தக்கூடிய பாக்டீரியங்கள் இருப்பதால் இது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகிறது. பந்தல் அவரையில் ஹெக்டேருக்கு 240 நாட்களில் 8-10 டன் மற்றும் குத்து அவரையில் 120 நாட்களில் 6-8 டன் மகசூல் கிடைக்கும்.


தட்டைப்பயறு: வெப்பத்திலும் மகசூல் கொட்டும்


வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தட்டைப்பயிரை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மற்றும் நடுநிலை கார அமிலநிலை கொண்ட மண் ஏற்றது. தனிப்பயிராக இருப்பின் ஹெக்டேருக்கு அனைத்து ரகங்களுக்கும் 20 கிலோ விதைகளும், கலப்புப் பயிராக இருப்பின் 10 கிலோ விதைகளும் தேவைப்படும். 120 நாட்களில் அறுவடை செய்து விடலாம். காய்கள் 80 சதவிகிதம் முற்றியபின், செடிகளை அறுத்துக் கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து, மணிகளைப் பிரித்தெடுக்க வேண்டும். ஹெக்டேருக்கு மானாவாரியில் 700-900 கிலோ மற்றும் இறவையில் 1,200-1,500 கிலோ மகசூல் கிடைக்கும்.


பச்சைப்பயறு: பலே வருமானம்


கோ 4, கோ 6, கேஎம் 2, விபிஎன் 1, பிஒய் 1 போன்ற பச்சைப்பயறு ரகங்கள் புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்றவை. ஹெக்டேருக்கு தனிப்பயிருக்கு 20 கிலோவும், கலப்புப்பயிருக்கு 10 கிலோ விதைகளும் தேவைப்படும். மூன்றில் 2 பங்கு காய்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் செடியை அறுவடை செய்து காயவைத்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். பச்சைப்பயறு தானியங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. பருப்பு தவிர எஞ்சிய பாகங்கள் பசுந்தாள் உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. ஹெக்டேருக்கு மானாவாரியில் 600-750 கிலோவும், இறவையில் 1,000-1,200 கிலோவும் மகசூல் கிடைக்கும்.


தினை: மானாவாரி மன்னன்


தமிழகத்தில் பெரும்பாலும் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்படும் தினை, கடினமான வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. செம்மண், இரு மண் கலந்த நிலங்கள் இதற்கு உகந்தது. ஒரு ஹெக்டேருக்கு வரிசை விதைப்பிற்கு 10 கிலோவும், தூவுவதற்கு 12.5 கிலோ விதைகளும் தேவைப்படும். 90-ஆம் நாளில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.  உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துவதாலும், சீரிய சாகுபடி குறிப்புகளைக் கடைப்பிடிப்பதாலும் தோராயமாக ஹெக்டேருக்கு ஒன்றரை டன் தானியமும், 5 டன் தட்டையும் பெறலாம். தினை தானியத்தை சாக்குப் பைகளில் வைத்து நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும். தினையில் உள்ள சத்துக்கள் நெல், அரிசி, கோதுமையில் உள்ளதைவிட அதிகமானது.


குதிரைவாலி: காலம் கம்மி, லாபம் ஜாஸ்தி


குதிரைவாலியை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு மழை பெய்த பின், ஒரு மாதம் வரை மழை இல்லாவிட்டாலும் தாக்குப் பிடிக்கும். பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் குதிரைவாலியைத் தாக்குவது இல்லை. கதிர் நன்கு காய்த்து முற்றிய பின், அறுவடை செய்து, நன்கு காய வைத்து சுத்தம் செய்து, காற்று புகாதபடி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். குதிரைவாலி சாகுபடியில் தானியங்களைத் தவிர, அவற்றின் தாள்களும் கால்நடைத் தீவனங்களுக்காக விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் கிடைக்கும். இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது.



கோதுமை, கம்பு, ராகி, மக்காச்சோளம், உளுந்து, சோயாமொச்சை போன்ற பயிர்களையும் புரட்டாசிப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விவசாயிகள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

 

மிரட்டும் மெட்ராஸ் ஐ!


கோடை காலம் வந்தாலே உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் வேகமா பரவும். இதுல குறிப்பா மக்கள தாக்குற நோய் மெட்ராஸ் ஐ தான். ஆனா என்னவோ சம்மர் முடிஞ்சு, 3 மாசம் ஆகியும் சிட்டிவாசிகளை இந்த நோய் மிரட்டிட்டு வர்ருது. டெய்லி 15 பேராவது மெட்ராஸ் ஐ அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வர்றதா அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் சொல்றாங்க.


மெட்ராஸ் ஐ என்ற நோய் ஒருவித வைரஸ் மூலம் பரவுகிறது. கண்வீக்கம், எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல் மற்றும் சிவப்பாகுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களிடம் மிகவும் எளிதாக இந்த நோய் பரவுகிறது. குறைந்தது இந்நோயின் தாக்கம் ஒரு வாரம் நீடிக்கும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



இதுகுறித்து கண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘மழைக்காலம் தொடங்கிய பிறகும் மெட்ராஸ் ஐ சிட்டியின் சில இடங்களில் பரவிட்டு வருது. இதில் பாதிக்கப்பட்ட 40 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கும், 30 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக செல்கின்றனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் சுய சிகிச்சை அளித்துக் கொள்கின்றனர். மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். கண் சிவப்பாகுதல், கண்ணில் நீர்வடிதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். பொதுவாக இந்த நோய் காற்று மற்றும் தண்ணீர் மூலமாக பரவுகிறது. 



இந்நோய் வராமல் இருக்க அடிக்கடி சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். மேலும் முன்தினம் இரவு சுமார் 15 நிமிடம் சூடு வைத்த தண்ணீரை கொண்டு மறுநாள் காலையில் கண்களை சுத்தம் செய்வது நல்லது. ஃபில்டர் வாட்டரை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் ஃபில்டர் வாட்டரில் பாக்டீரியாக்கள் இருக்காது. ஆனால் அதில் வைரஸ்கள் இருக்கும் என்கிறார்.  அதானல உங்க கண்களை ஜாக்கிரதையா பார்த்துக்குங்க!

ஆர்டிஐ( RTI ) பற்றி தெரியுமா?




அரசு துறையின் நடவடிக்கை, செயல்பாடுகளை சாமானிய மக்கள் அறிந்து கொள்ளவது இயலாத காரியமாகவே இருந்து வந்தது. ஆனா இப்போது அப்படியில்லை. அரசின் அனைத்து நடவடிக்கை பற்றியும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலமாக யார் வேண்டுமானாலும் தகவலை கேட்டறியலாம்.
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அறிய இச்சட்டத்தை பயன்படுத்தலாம். ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்துவது கிடையாது. உதாரணமாக, அரசு அலுவலகங்களின் கோப்புகள், ஆவணங்கள், சுற்றறிக்கைகள், ஆணைகள் ஆகியவற்றை கேட்டு பெறலாம். இதே போல் சாலை அமைத்தல், பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளின் மாதிரிகள் ஆகியவற்றை கேட்டு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்பவர் தனது பெயர் மற்றும் முகவரியுடன் தகவல் குறித்த காரணத்தையும் சாதாரண தாளில் எழுதினால் போதும். அதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் உள்ள உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

தகவல் பெறுவதற்காக 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உரிய தகவல் கிடைத்த உடன் அதை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து கொண்டே படிக்கலாம். தகவலின் ஜெராக்ஸ் வேண்டுமென்றால் ஒரு பக்கத்திற்கு ரூ. 2 வசூலிக்கப்படும். சம்பந்தப்பட்ட பதிவேடுகளை பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது. ஆனால் அதற்குபிறகு வரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 5 வசூலிக்கப்படும். சி.டியில் வேண்டுமானால் ரூ. 50 வசூலிக்கப்படும்.

 உயிர் பாதுகாப்பு பற்றிய கேள்வியாக இருந்தால் 2 நாட்களிலும், பொது தகவலாக இருந்தால் 1 மாதத்தில் விண்ணப்பதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். உரிய தகவல் வழங்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாம். தகவல் தர மறுத்தாலோ அல்லது முழுமையான தகவலை தராமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட துறைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க தகவல் ஆணையத்திற்கு உரிமையுள்ளது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தேனாம்பேட்டையில் (வானவில் அருகே) இயங்கி வருகிறது. உங்களுக்கு அரசுத்துறைகளின் செயல்பாடு, திட்டம் குறித்து தெரிய வேண்டுமானால் தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்துங்க... தொடர்புக்கு: 044&24357580.

அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்- சுற்றுலாத்தலங்கள்!



      அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
 
டெல்லி குதுப்மினார். இந்தியாவின் மிகஉயர்ந்த கோபுரம். செம்மண்-பாறைக் கற்களால் உருவான அரிய பொக்கிஷம். இதன் உயரம் 72.5 மீட்டர் (சுமார் 238அடி). உயர்ந்து நிற்கும் குதுப்மினார், சுவாரஸ்ய வரலாற்றையும் உள்ளடக்கியது.

 
டெல்லி மட்டுமின்றி தெற்காசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர், முதல் சுல்தான் என்ற பெருமைக்குரியவர் குத்புதீன் ஐபக். அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர். மத்திய ஆசியாவில் துருக்கிய மரபில் பிறந்த குத்புதீன் ஐபக் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டார். இடையே கைமாறி, கடைசியில் முகமத்கோரியால் விலைக்கு வாங்கப்பட்டார். தனது வீரதீர செயல்பாடுகளால் கோரியின் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின் மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.டெல்லியில் உருவான முஸ்லிம் நினைவுச்-சின்னங்களுக்கு காரணகர்த்தா இவரே.
 
முதலில் குவ்வாத்-உல்-இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் ஐபக், 1199ம் ஆண்டில் குதுப்மினாருக்கு அஸ்திவாரம் போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியாக இந்த கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு முற்றுப்பெற்ற நிலையில் குத்புதீன் ஐபக் திடீரென மரணம் அடைந்தார். பிறகு ஆட்சிக்கு வந்த குத்புதீன் ஐபக்கின் மருமகன் சம்சுதீன் அல்துமிஷ், கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குகளை அமைத்தார். 1211 முதல் 1236ம் ஆண்டு வரை கட்டடப்பணிகள் நடந்தன.
 
இருப்பினும், கடைசி அடுக்கு 1386ம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இப்படி மூன்று மன்னர்களால் உயர்த்தப்பட்டதுதான் குதுப்மினார். ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. குதுப்மினாரின் உச்சிக்கு சென்றடைய 379 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
குதுப்மினார் வளாகத்தில் உள்ள அல்துமிஷ் ஸ்தூபி, அலைய் தர்வாஷா மெயின்கேட், அலைய் மினார் போன்ற கட்டடங்களும் கலைநயம் மிக்கவை. ஏழு மீட்டர் உயரம் கொண்ட இரும்புத்தூண் ஒன்றும் இங்கு உள்ளது. நான்கரை அடி பருமனும் ஏழரை டன் எடையும் கொண்ட இந்த இரும்புத்தூண் இன்றளவும் சிறிதும்கூட துருப்பிடிக்காதது அதிசயமே.
 
குதுப்மினாரையும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களையும் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பு 1993ம் ஆண்டில் அறிவித்தது. நவம்பர்- டிசம்பரில் இங்கு குதுப் திருவிழா நடத்தப்படுகிறது. டெல்லி மாநில சுற்றுலாத்துறை சார்பில் 3நாட்கள் நடைபெறும்  இந்த  விழா, இசை - நடனம் - நாட்டியம்  என அமர்க்களப்படுகிறது.
 
அடிமை உருவாக்கிய அற்புத கோபுரம் குதுப்மினார்,தன்னைக் காண்போரையும் அடிமையாக்கி விடுகிறது, வனப்பாலும் வசீகரத்தாலும்..!

இந்தி, தமிழ் உட்பட 5 மொழிகளில் ஆன்லைனில் படிக்க புதிய திட்டம்!







 இந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை. உயர்கல்வி துறை தரம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருகிறது. இதற்காக தேசிய தொழில்நுட்ப வழி கல்வி மேம்பாட்டு திட்டம் (என்பிடிஇஎல்) 2003ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலவசமாக அனைத்து வகையான தரமான பாடத்திட்டங்கள் வழங்குவதே முக்கிய நோக்கம். 

http://nptel.iitm.ac.in  மற்றும் http://.youtube.com/iit  என்ற இணையதள முகவரியில்  எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் உள்ளன. வீடியோவிலும் கிடைக்கிறது. முதல்நிலையில் பி.இ பிரிவில் கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. பேராசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் இந்த வசதி மூலம் எளிமையாக படித்து அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இதற்கு யி96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 700 பாடங்கள் இணையதளம் வழியாக இலவசமாக படிக்க முடியும். 14,000க்கு மேற்பட்ட வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முன்னேறி வருகிறது. இதில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள். அமெரிக்கர்கள் 5 சதவீதமும், மற்ற நாடுகளை சேர்ந்த 15 சதவீதம் பேரும் பயன்படுத்துகின்றனர்.

இத்திட்டத்தின் 4வது நிலை 2014ல் தொடங்குகிறது. இதில், முக்கிய அங்கமாக இதுவரை அளிக்கப்பட்டு வரும் மொத்த பாடப் திட்டங்களும், பயிற்சி முறைகளும் பிராந்திய மொழிகளில் அளிக்கும்போது, மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு அறிவுதிறனை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று ஐஐடி பேராசிரியர்கள், இத்திட்டத்தின் நிர்வாகிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பி.இ பாடத்திட்டங்களை மொழிபெயர்ப்பு செய்து இணையதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணியை ஐஐடிக்கள் தொடங்கவுள்ளது. இதுதவிர, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதற்கான பாடத்திட்டங்களை ஆன்லைனில் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து என்பிடிஇஎல் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி பேராசிரியருமான மங்கல சுந்தர், திட்ட அலுவலர் உஷா நாகராஜன் கூறியதாவது:
மாணவர்கள் உயர்கல்வியை கற்கவும், தொடர்ந்து புதிய தொழில்பயிற்சிகளை பெறவும் ஆன்லைன் மூலம் இலவசமாக பாடம் நடத்தப்படுகிறது.  முதல் நிலையில் பி.இ,  மேலாண்மை படிப்புகள் தொடர்பாக 265 பாடங்கள் பெற வழி வகுக்கப்பட்டது. தற்போது 650க்கும் மேற்பட்ட பாடங்கள் இணையதளத்தில் பெற முடியும். ஆண்டுதோறும் 200 புதிய பாடத்திட்டங்களை  சேர்க்க உள்ளனர்.

அடுத்த கட்டமாக பிராந்திய மொழிகளில் பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட பாடங்களை இணையதளம் மூலம் அளிக்க முயற்சித்து வருகிறோம். முதல்கட்டமாக இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த வசதியை தர முடிவு செய்துள்ளோம். விரைவில் இதற்கான மொழிபெயர்ப்பு பணிகள் தொடங்கும். இதற்கு அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்பு முக்கியம்.

 இதுதவிர, திறன்மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கவுள்ளோம். பிராந்திய மொழித்திட்டத்தின் மூலம் பொறியியல் படிக்கும் 70 சதவீத மாணவர்கள் பயன்பெற முடியும். அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான பாடத்திட்டங்களையும் இணையதளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும், என்பிடிஇஎல் திட்டத்தின் கீழ் புதிய சான்றிதழ் படிப்புகள் தொடங்கவுள்ளன. இதில் அனைத்து பொறியியல் மாணவர்களும் சேரலாம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

இந்த பயிற்சி திட்டங்கள் குறித்து நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி பிரவின் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழில்நுட்ப இயக்குநர் அல்லது கல்வித்துறை செயலாளர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கருத்தரங்கம், துண்டுபிரசுரங்கள் அளித்தல், கலை நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்

என்பிடிஇஎல் திட்டத்தில் 2008ம் ஆண்டில் 41,42,726 பார்வையாளர்கள் இருந்தனர். ஒரு சந்தாதாரர்கள் கூட இல்லை. இப்போது 9 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 697 பார்வையாளர்கள் உள்ளனர். 1,98,041 பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.

பிசிசிஐயின் தலைவராக சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு!



கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் வேறு எந்த நிர்வாகிகளும் வேட்பு மனுதாக்கல் செய்யாத நிலையில் சீனிவாசன் பி.சி.சி.ஐ தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து என் சீனிவாசனுக்கு அடுத்த ஓராண்டு காலம் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.



sep 29 - b c c i srinivasan

 


இன்று காலை சென்னையில் நடைபெற்ற பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டத்தில் சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு சீனிவாசனை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தற்போது 3வது முறையாக சீனிவாசன் தேர்ந்தெடுகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது சீனிவாசனால் பிசிசிஐ தலைவராக உடனடியாக பதவியேற்க முடியாது. ஏனெனில் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை விவகாரத்தில் சீனிவாசன் சிக்கியுள்ளதால் உச்சநீதிமன்றம் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உடனடியாக பதவி பொறுப்பை ஏற்ககூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. பீகார் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கு முடியும் வரை சீனிவாசன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்தல் முறைப்படியே நடந்துள்ளதாக ராஜூவ் சுக்லா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே பிசிசிஐ தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் சீனிவாசன் தலைவராக பொறுப்பேற்பார் என்றும் கூறினார். இதனிடையே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மத்திய மண்டல தலைவராக ராஜூவ் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


N Srinivasan re-elected BCCI president;


***********************************


Narayanaswamy Srinivasan will be elected unopposed as president of the Board of Control for Cricket in India (BCCI) for a third year at its Annual General Meeting (AGM) in Chennai on Sunday alongwith all other office bearers.Srinivasan, however, will know Monday whether he can take charge or not only after the Supreme Court decides Monday on the petition filed by the secretary of the Cricket Association of Bihar.

கடவுள் பக்தி (நீதிக்கதை)!




ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான்.

நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன்.

ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான்.

என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன்.

அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை.

நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான்.

நீ சொல்வது பொய்- என்றான் முருகன்.

இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது.

அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு.

பசியை எப்படி காட்டமுடியும்.

அதன் நிறம்.

பசிக்கு ஏது நிறம்.

அதன் குணம்.

குணம் இல்லை.

உன்னால் உன் பசியைக் காட்டமுடியவில்லை.ஏன்.?

அது வந்து....அது வந்து..

எப்படி பசி என்று ஒன்று இருந்தும் உன்னால் அந்தப் பசியை காட்டமுடியவில்லையோ அது போன்று தான் கடவுள் என்று ஒருவர் இருந்தும் அவர் புற உருவத்தைக் காட்டமுடிவதில்லை.

கடவுள் மீது பக்தி உள்ளவர்கள் மட்டுமே அந்த இறைவன் இருப்பது உணரமுடியும் என்றான் முருகன்.

நாதனுக்கும் கடவுள் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது.

Sunday, 29 September 2013

‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!


சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


sep 28 - joy of giving

 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது.


ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி பிறருக்கு கொடுத்து உதவுபவர்களே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றனர். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஒளவையார் என்று பலரை உதாரணமாக சொல்லலாம்.



எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், ஈகைப்பணிகளை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதலாம், பள்ளிக்கு அருகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.



முதியவர்களுக்கு பத்திரிகைகள் வாசித்து காட்டலாம், எழுத படிக்க தெரியாத முதியவர்களுக்கு கல்வி கற்றுத்தரலாம், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யலாம். போக்குவரத்து போலீசாருக்கு சிறு பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். பஸ்சில் இடம் கிடைக்காமல் நிற்பவர்களுக்கு சீட் கொடுத்து உதவலாம். 10 பொன்மொழிகளை எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


மிஸ்.பிலிப்பைன்ஸ் மேகன் யங் உலக அழகியானார்!


இந்தோனேஷிய நாட்டில் நடந்த உலக அழகி 2013ம் ஆண்டுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயது நிரம்பிய மேகன் யங் இறுதி சுற்றில் வென்று கிரீடம் சூட்டப்பட்டார். இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் 63வது வருட உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் கலந்து கொண்டனர்.
இறுதி சுற்றுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகன் யங் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்காவில் பிறந்த யங் தனது 10வது வயதில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.



Miss World 2013 Final

 



இநதோனேஷியாவில் நடந்த இந்த போட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். எனவே, போட்டி அமைப்பாளர்கள் பாதுகாப்பினை அதிகரித்து இருந்தனர். இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி அமைப்பினர் கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானது என்றும் உடலை காட்டி நடத்தப்படும் போட்டியினை தடை செய்ய அரசுக்கு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போட்டி நடத்துபவர்கள், பிகினி உடையில் தோன்றும் நீச்சல் உடை போட்டியினை நடத்த மாட்டோம் என ஒப்புதல் அளித்தனர்.



எனினும் போட்டியை தடை செய்ய தொடர்ந்து எதிர்ப்பு வலு பெற்று வந்தது. இதனால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி நகரில் இறுதி போட்டி நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் இறுதி போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க அங்கு குவிக்கப்பட்டனர். அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சியின் முடிவில் 127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார். மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.


இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மாடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

Miss Philippines Megan Young crowned Miss World 2013


********************************


 Miss Philippines was crowned Miss World 2013 today in a glittering finale on the Indonesian resort island of Bali amid tight security following weeks of hardline Muslim protests.Megan Young beat five other finalists, including France and Brazil, to win the coveted title in a contest broadcast to more than 180 countries worldwide.

.

கிரெடிட் கார்ட மோசடியா?வங்கிகளே பொறுப்பு!: ரிசர்வ் வங்கி உத்தரவு!


வங்கி கிரடிட் கார்டுகளில் ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.அத்துடன் இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


sep 29 - bank ceredit card

 


கிரெடிட் கார்ட் திட்டத்தில் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்று வருவதால் அவற்றின் பாதுகாப்பு முறைகளை ஜூலை மாதத்திற்குள் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
பணம் எடுக்கும் இயந்திரங்களில் மின்னணு சிப் மற்றும் கிரெடிட் கார்ட் உடையவர் பணம் எடுக்கும்போது அவரை அங்கீகரிக்கும்விதமாக அவர் பதிவு செய்யவேண்டிய ரகசியக் குறீயீட்டு எண் போன்றவற்றை செயல்படுத்துமாறு கேட்டிருந்தது. 


ஆனால் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்த இயலாததால் செப்டம்பர் வரை இதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆயினும், தற்போதும் இந்த ஏற்பாடு முழுமையடையவில்லை என்பதால் மீண்டும் இந்தக் கெடுவை நீட்டிக்குமாறு வங்கிகள் கோரியிருந்தன.
தொடர்ந்து இந்த காலக்கெடுவை நீட்டிப்பதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. மேலும், இந்தப் பாதுகாப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படாத இயந்திரங்களில் புதிதாக ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


தற்போது இந்த சர்ச்சை குறித்த தீர்மானம் மிகவும் சிக்கலான நடைமுறை என்பதால் முதலீட்டாளர்கள் தாங்கள் இழந்த பணத்தைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றது. பொதுவாக இத்தகைய திட்டங்களில் இரண்டு வங்கிகள் செயல்படுகின்றன. 


முதலாவது வங்கி முதலீட்டாளர்களுக்கு கடன் அட்டைகளை (கிரெடிட் கார்ட்) வழங்குகின்றது. மற்றொரு வங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களை செயல்படுத்துவதாக அமைகின்றது. எனவே, மோசடிப் புகார் அளிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் முதலாவது வங்கி இதனை உறுதி செய்துகொண்டு பாதிப்படைந்தவர்களுக்கு மேலே குறிப்பிட்டபடி பணத்தை வழங்கவேண்டும். 


அதன்பின்னர் அந்த வங்கி பணம் அளிக்கும் இயந்திரத்தைச் செயல்படுத்தும் வங்கியிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவு கடன் அட்டைகளின் பாதுகாப்பு குறித்த ரிசர்வ் வங்கியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கருதப்படுகின்றது.


Banks to pay for credit card frauds, RBI says

**********************************
The Reserve Bank of India has refused to extend the deadline for upgrading security on credit card swipe machines and has ordered banks to compensate cardholders in seven days if any fraud occurs on non-compliant terminals.


உலக இதய நாள் – செப்டம்பர் 29!


இந்த உலகில், முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி நோயான “மாரடைப்பு” எனும் கொடிய நோயினால் வருடத்திற்கு 17மில்லியன் மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும்தான் காணப் படுகிறது.இந்நிலையில்தான் செப்டம்பர் 29-ம தேதியான இன்று உலகம் முழுவதும், ‘இதய நாள்’ இன்று கொண்டாடப்படுகிறது. 



உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, ‘மாரடைப்பை’ வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான். உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தையே உருவாக்கமுடியும்.



Heart

 


“மாரடைப்பு (heart attack)” எனும் நோயே, தவறான வாழ்கை முறையினால் ஏற்படுவது. எனவே, சீரான வாழ்க்கை முறையினால் மட்டுமே அந்நோயைத் தடுக்க முடியும். வாழ்க்கை முறை என்பதை வரையறுப்பது அவர்தம் மனநிலையேதான். 


எதிர்மறை எண்ணங்களான, கோபம், போட்டி, பொறாமை, ஆவேசம், ஆத்திரம் போன்றவற்றால் மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன்விளைவாக வேண்டாத அட்ரினலின், கார்டிசால் போன்ற ஆர்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்க வைத்து அவை, இரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் : 


ஆவேசத்தையும் , ஆத்திரத்தையும் அதிகமான கொழுப்பு உணவைச் சாப்பிடுவதில் காட்டுவது. உடல் எடை கூடுவது. உடற் பயிற்சியைத் தவிர்ப்பது. 


இந்நிலையில் மகிழ்ச்சி என்னும் மாய உணர்வினால் புகை பிடிப்பது , மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவது. பதற்றம், உடல் நடுக்கம், அதிக வியர்வை. இதயத் துடிப்பு அதிகரித்தல். இரத்த அழுத்தம் கூடுதல். கல்லீரலில் உற்பத்தியாகும் கெட்ட கொலசுட்ரால் கூடியும் , நல்ல கொலசுட்ரால் குறைந்தும் இரத்தத்தில் கலக்கின்றது. இரத்தச் சர்க்கரை அளவு கூடுதல். 



இவை அனைத்தும், இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு வருவதற்கும், சுருங்குவதற்கும் காரணமாகி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா, தியா னம் செய்ய வேண்டும். சத்துள்ள காய்கறிகள், பழங் களை சாப்பிட வேண்டும். அரிசி கோதுமை உணவையும் மற்றும் எண்ணெய், நெய், வறுத்த உணவு பொருட்கள், ஊறுகாய் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும். இதனை நாம் கடைப்பிடித்தால், இதய நோய் வராமல் தடுக்க முடியும்.


அத்துடன் தினமும் அரை மணி நேரமாவது காலார நடை போடுங்கள். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுதுவதை பெருமளவு குறைத்து விடலாம். பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (walking), மெல்லோட்டம்(jogging), சைக்கிள் பயிற்சி(cycling), நீச்சல் பயிற்சி(swimming) என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உடல் அமைப்பு, ஓய்வு நேரம்,உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.


குறிப்பாக வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. 


அதிலும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் இருதயம் கடைசி வரை ஆரோக்கியமாய் இயங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.!


பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின்ன பிரேக் எடுத்து கொள்வது அவசியம் என்கின்றனர்.இரண்டு வகைகளில் இந்த பிரேக் வலியுறுத்தப்படுகிறது.ஒன்று அமர்தல் தொடர்பாக!.இன்னொன்று பார்த்த‌லுக்காக!


அதாவது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது ஒரே இடத்தில் ஒரே மாதிரி அமர்ந்திருக்க நேர்கிறது அல்லவா! உடலுக்கு இது கேடு என்று சொல்கின்றனர்.இல்லை எச்சரிக்கின்றனர்.இடுப்பு வலியில் துவங்கி பலவித பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.இப்படி கம்ப்யூட்டர் முன் பழியாக கிடப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவர்த்து அளிக்க எர்கோனாமிக்ஸ் என்னும் தனிப்பிரிவே இருக்கிறது.எர்கோனாமிக்ஸ் என்றால் அமர்தல் கலை!

sep 28 - tec glass MINI

 


இதே போல கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களுக்கு களைப்பு ஏற்படுகிறது.இதை தவிர்க்க இடையிடையே கண்களுக்கு ஓய்வு தேவை என வலியுறுத்துகின்றனர். இதை நாமாக செய்ய மாட்டோம் என்று சரியான இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ள உதவுவதற்கு என்றே இணையதளங்களும் செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.


அதோடு 20;20 என ஒரு விதியும் உருவாக்கியுள்ளனர்.
இவை தவிர கண்களை பாதுகாப்பதற்கான குளிர்கண்ணாடியும் கூட உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குளிர் கண்ணாடியை நாம் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை .பிரவுசருக்கு மாட்டி விடலாம்.


நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்து கொண்டிருக்கும் போது அதன் பிரகாசத்தன்மை கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும்.குறிப்பாக மீக நீளமான கட்டுரையை படிக்கும் நிலை ஏற்பட்டால் கண்களில் பூச்சி பற‌ப்பது போல உணர்வு ஏற்படலாம்.


இதை தவிர்க்க கம்ப்யூட்டர் திரையின் பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சம் குறைத்து கொண்டால் படிக்கும் போது கணகளுக்கு இதமாக இருக்கும் அல்லவா? கூகுல் கூரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ள சன் கிளாசஸ் இதை தான் செய்கிறது.


இந்த பிரவுசர் நீட்டிப்பை டவுண்லோடு செய்து கொண்டால் ,கம்ப்யூட்டரில் படிக்கும் போது அயர்ச்சியாக உணர்ந்தால் உடனே இதை கிளிக் செய்து பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தின் பிரகாசத்தை குறைத்து கொள்ளலாம்.
குளிர்கண்ணாடி வழியே பார்க்கும் போது கண்கள் கூசாமல் காட்சிகள் இதமாக தெரிவது போல இப்போது இணையதளமும் பிரகாசம் குறைந்து மங்களாக ஆனால் தெளிவாக தெரியும்.எந்த அளவுக்கு பிரகாசம் குறைய வேண்டும் என்று கூட தீர்மானித்து கொள்ளலாம்.இதற்காக நீட்டிப்பில் உள்ள கட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். கட்டத்தின் நடுவே உள்ள கர்சரை அப்படியும் இப்படியும் நகர்த்தினால் பிரகாசம் கூடும் குறையும்.


கம்ப்யூட்டரிலேயே பிரகாசத்தை மாற்றி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் இந்த பிரவுசர் சேவை கம்ப்யூட்டரில் எந்த மாற்றமும் செய்யாமல் பிரவுசரில் மாற்றம் செய்து பார்க்கும் இணையதளத்தின் பிரகாசத்தை மங்களாக்கி தருகிறது.


அதாவது பிரவுசருக்கு குளுர்கண்ணாடியை அணிவித்து நம் கணகளுக்கு இதம் தருகிறது.


குளிர்கண்னாடி டவுண்லோடு செய்ய:




அன்பே சிறந்தது (நீதிக்கதை)!



 
 
அந்த வீட்டில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான்.
அப்போது வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

தந்தை 'வாருங்கள்' என்றார்.

'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது...யாராவது ஒருவர் தான் வரமுடியும்...என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் குமரனோ ...'அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்...நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட ...அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாம்...அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.உடன் குமரனின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.

இதையே வள்ளுவர்..

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


என்கிறார்..

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும்.

சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

Saturday, 28 September 2013

புலியும்..மானும்..நரியும் (நீதிக்கதை)





ஒரு காட்டில் புலியை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு கூண்டை வைத்து..அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்திருந்தான்.புலி ஆட்டிறைச்சி மீது ஆசைப்பட்டு உள்ளே வந்ததும் கூண்டு மூடிக்கொள்ளும்..அப்படியான கூண்டு அது.

அதன்படியே, புலி ஒன்று ஆட்டிற்கு ஆசைப்பட்டு உள்ளே செல்ல..கூண்டு மூடிக் கொண்டது.

கூண்டிற்குள் மாட்டிக் கொண்ட புலி..தப்பிக்க வழி தெரியாமல் விழித்த போது..ஒரு மான் அந்தப் பக்கம் வந்தது.

புலி மானிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கூறியது.

அதற்கு அந்த மான்..'உன்னை நான் காப்பாற்றினால் வெளியே நீ வந்ததும் என்னை அடித்துக் கொன்றுவிடுவாயே!'என்றது.

உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, மான் கூண்டின் கதவை திறந்து விட்டது.கூண்டிற்குள் இருந்த ஆடு தப்பினால் போதும் என ஓடி ஒளிந்தது.வெளியே வந்த புலி, 'ஆடும் ஒடி விட்டது..எனக்கோ பசி..உன்னைத்தான் கொல்லப் போகிறேன்' என்றவாறு மானின் மீது பாயத் தயாராகியது.

உடன் மான் புலியின் உறுதிமொழியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.

அந்நேரம் ஒரு நரி அங்கு வந்து..நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தது.

மானைக் காப்பாற்ற விரும்பிய நரி, புலியைப் பார்த்து ' நான் நீதி வழங்குகிறேன்..நடந்தவற்றை அப்படியே இருவரும் செய்துக் காட்டுங்கள்' என்றது.

பின் புலியைப் பார்த்து..'நீங்கள் கூண்டிற்குள் எங்கு இருந்தீர்கள்?' என்றது.

புலியும் கூண்டினுள் சென்று..'இங்குதான்' என்று சொல்லும் போதே நரி மீண்டும் கூண்டை மூடியது.புலி இப்போது மீண்டும் கூண்டுக்குள்.

நரி புலியைப் பார்த்து சொல்லிற்று..'உங்களைக் காப்பாற்றிய மானையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை '

பின் மானிடம், 'ஒருவரைக் காப்பாற்றுமுன் அவரின் தராதரத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்..தகுதியில்லாதவர்க்கு உதவக் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றது.

நாமும் தகுதியற்றவர்களுக்கு உதவினால் துன்பத்தில் மாட்டிக் கொள்வோம்.ஒருவரின் தரம் அறிந்து உதவ வேண்டும்.

லேசர் கதிரின் வலிமை!




ஆப்பிள் நிறுவனம் புதிய ios7.0.2 மேம்படுத்தல் வெளியீடு!



ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐ பேட் டச் சாதனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ios7 அல்லது ios7.0.1 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை மேம்படுத்தப்பட்டு(updates) புதிய ios7.0.2 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ios7 வெளியீட்டுக்குப் பிறகு லாக் ஸ்கிரீன் சிக்கல்களை மேம்படுத்தப்பட்டு சரி செய்துள்ளது. ஐபோன் 5-ல் 21MB பதிவிறக்கம் செய்யக்கூடியதாக ios7.0.2 மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் ஏற்படும் போதும் ஐபோன் வாடிக்கையாளர் மற்றொருவர்களுக்கு அழைக்ககூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.



ஐபோன் சாதனத்தில் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் இருக்கும் போது கூட எமர்ஜென்சி கால் (emergency call) அழைப்பினை மட்டும் ஏற்கக்கூடியதாக இல்லாமல் சாதனத்தில் இருக்கும் நம்பர்களை அழைக்கக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. NULL dereferences என்ற சிக்கல்களை சரி செய்வதற்காக இந்த புதிய 7.0.2 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

iphone 5S hack செய்ய முடியுமா! அட கடவுளே!






திருடர்களை விட ஒருபடி மேலேயே யோசிக்கிறாங்களே….



அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் 5-ல் கைரேகை ஸ்கேனிங்க் மூலம் பாதுகாப்பு வசதி அளித்துள்ளது.



ஐபோனை ஆக்சஸ் செய்வதற்கென கைரேகையை வழங்கினால் மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசில நாட்களிலேயே இப்பாதுகாப்பு வசதியை தாம் உடைத்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளனர் ஜேர்மனிய ஹேக்கர் குழுவினர்.



கைரேகையை படம்பிடித்து அதியுயர் தரத்தில் கிளாஸ் ஒன்றில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதைக்கொண்டே ஐபோனை இயக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.


டெல்லி செங்கோட்டை- சுற்றுலாத்தலங்கள்!


      டெல்லி செங்கோட்டை
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
டெல்லி செங்கோட்டை
 
டெல்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான்.
 
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.
 
யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன.
 
கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
 
'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

 
இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம்.
 
செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.