Friday, 15 November 2013

கடவுளை மனிதன் கேட்டான் - நகைச்சுவை!


கடவுளை மனிதன் கேட்டான்


"பொண்ணுங்க


 எல்லாம் நல்லா இருக்காங்க. ஆனா


 பெண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி


கொடுமைப்படுத்துறாங்க?"


கடவுள் சொன்னார்,



 "நான்


 பொண்ணுங்களை மட்டுதான் படைத்தேன்.


 அவங்களைக் கட்டிக்கிட்டுப்



 பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது


ஆம்பளைகளான  நீங்கதான்."

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்!

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல் தான். இருந்தாலும் அந்தப் பகிர்தலால் உங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதில் தான் இருக்கிறது, உங்கள் சாமர்த்தியம். 'எல்லாரும் நல்லவரே' என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒருவிதத்தில் வெகுளித்தனம் தான்.

வெளியூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிலும் இருக்கிற புதியவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சிலர் தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஆதியோடந்தமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடும்ப விஷயத்தை அப்போது தான் டீக்கடையில் அரை கிளாஸ் டீயுடன் அறிமுகமான சந்தித்த நபரிடம் வெளியரங்கமாய் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இதில் பெண் திருமணத்திற்காக நகை வாங்கிப் போகும் விஷயம் வரை அப்பாவியாய் அள்ளிக் கொட்டுவார்கள். இப்போது கேட்ட நபர் நல்லவராகவே இருக்கட்டும். கொஞ்சம் தொலைதூரத்தில் இருந்தபடி இதை காதில் வாங்கிய அரை பிளேடு பக்கிரியின் காதில் விழுந்தாலே போதுமே! பெரியவரும் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரமாட்டார்.

நகையும் ஸ்வாகா. அப்புறம் பெண் கல்யாணத்தை எப்படி நடத்துவது? நமக்குள் இருக்கும் பண்பு நம் வாழ்க்கை ஓட்டத்தில் நம்மோடு இணைந்து கொண்டது. எதற்காகவும் அதை இழக்கத் துணிய மாட்டோம். நல்ல பண்புகளை அணிகலன்களாகக் கொண்டிருக்கும் நாம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா!

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது? நாம் விட்டுக்கொடுக்கும் போதும், மனதைத் திறந்து உள்ள(த்)தை சொல்ல முற்படும் போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாளியாக்க முற்படலாம். அவர்களை இனம் கண்டு எந்த ரீதியிலும் அவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.

அணுகவிடாமல் பார்த்துக் கொள்வது கட்டாயம். அதற்கு நமக்குத் தேவை, பகிர்ந்து கொள்ளும் பண்பு. இந்த மாதிரியான பகிர்தல் ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் இருபாலருக்கும் அவசியமானதே. நம்மை குழப்பிக்கொண்டிருக்கும் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசும்போது தான் அதற்கான தீர்வு கிடைக்கும்.

எதையுமே பகிர்ந்து கொள்ளாதவர்கள் எத்தனை உயரிய ஸ்தானத்தில் இருந்தாலும் கடைசியில் பித்துப்பிடித்த நிலைக்குத்தான் ஆளாகிறார்கள். அதனால் இந்த சிக்கலை என்னால் சீரமைக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்குள் எழத்தொடங்கி விட்டால், அப்போதே அதை உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து பாருங்கள்.

நிச்சயம் உரிய நேரத்தில் உரிய தீர்வு கிடைக்கும். அதேநேரம் 'ஆயுளுக்கும் இது ரகசியம்' என்று நீங்கள் எண்ணுகிற அந்தரங்க விஷயங்களை மட்டும் எப்போதும் போல் உங்களுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்வது நல்ல வழக்கம் தான். இருப்பினும் மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் அளவு நம் அந்தரங்க விஷயங்களை சொல்வது பாதுகாப்பற்றது.

நம்மை நாமே மற்றவரிடம் அடமானம் வைப்பது போல ஆகும். நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. மிகவும் முக்கியமான விஷயங்களை குறிப்பாக எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது தேவையற்றது. அதனால் நமக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். நம்முடைய செயல்கள் அனைத்திற்கும் நாம் தான் பொறுப்பாளி.

இதை மற்றவரிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது? இதையெல்லாம் நட்பின் இலக்கணம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. இதனால் பல நேரங்களில் நல்ல நட்பு கெடும். சில நேரங்களில் நெருங்கிய நண்பர்கள் கூட 'உன் காதோடு மட்டும் ஒரு ரகசியம்' என்று சொல்ல முன்வருவார்கள். தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

'எப்போது இதை ரகசியம் என்று சொன்னாயோ, கடைசிவரை அது உன்னோடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று சொல்லி விடுங்கள். சிலர் இம்மாதிரி முக்கிய ரகசிய விஷயங் களைக் கூட நண்பர்கள் சிலரிடம் தனித் தனி சந்தர்ப்பங்களில் சொல்லி விடுவார்கள்.

இதற்குப் பிறகு அது ரகசியம் என்றால் தானே அதிசயம். ரகசியம் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொரு நண்பனையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பார்கள். 'சொன்னது இவனாக இருக்குமோ' என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து கடைசியில் நட்பு கெட்டது தான் மிச்சம் என்றாகி விடும். சிலருக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் நல்லவர்களாகவே தெரிவார்கள்.

வேறுசிலருக்கோ பார்க்கிற எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை கண்ணில் பட்டு விடும். மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணர் தருமரை அழைத்து 'நகரெங்கும் போய் உன் கண்ணில் படுகிற ஒரு கெட்டவனை அழைத்துக் கொண்டு வா' என்றார். அதேவேளையில் துரியோதனை அழைத்தவர், 'நகர வீதிகளில் பயணப்பட்டு உன் பார்வையில் படுகிற ஒரு நல்லவனை அழைத்துக் கொண்டு வந்து சேர்' என்றார். இருவரும் போனார்கள்.

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள். நகர் முழுக்க சுற்றித் திரிந்தும் ஒரு கெட்டவன் கூட அவர் கண்ணில் படாமல் போனதால் வெறுங்கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்.

துரியோதனன் கதை வேறு மாதிரி இருந்தது. அவன் யாரைப் பார்த்தாலும் அவரிடத்தில் ஒரு குறையை கண்டு பிடித்தான். இத்தனை கெட்டவர்களுக்கு மத்தியில் ஒரு நல்லவனை என்னால் எப்படி கண்டு பிடிக்க முடியும் என்ற கவலையுடன் அவனும் அரண்மனைக்கு திரும்பினான்.

இருவரும் வெறுங்கையுடன் வந்து நிற்பதை பார்த்த கிருஷ்ணர், புன்னகைத்துக் கொண்டார். நல்லவன் பார்வைக்கு கெட்டவன் என்று யாருமில்லை. அதுமாதிரி கெட்டவன் பார்வையில் நல்லவன் தெரியவே இல்லை என்பது தெரிந்து தானே அவர்களை அனுப்பி இப்படியரு பரீட்சை மேற்கொண்டார்..!

நம்முடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல நட்பு வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது. 'புற' விஷயங்களை பகிர்ந்து கொள்வது போல நமக்கே நமக்கான அந்தரங்கத்தை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதில் நீங்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே நட்பு நிலைக்கும். நீடிக்கும்.

வாழை இலை விருந்து ..

வாழைனாலே 'மங்களம்'னு அர்த்தம். கல்யாணம் போன்ற விசேஷங்களில் கூட வாழைமரத்தைத்தான் கட்டறோம். வாழைமரத்தோட எல்லா பாகங்களுமே நமக்குப் பயன்படுது. அந்தக் காலத்துல பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வாழை மரம் இருக்கும். அதனால் எல்லாரும் அப்போ தினமும் வாழை இலையிலதான் சாப்பிடுவாங்க.


வாழை இலையில சாப்பிட்டாகண்ணுக்குக் குளிர்ச்சி. 'ஆல இலை, அரச இலை, தேக்கு இலை'னு எத்தனையோ இலைகள் இருந்தாலும், வாழை இலைக்கு மட்டும்தான் தனிப் பெருமையே இருக்கு. எதைச் சாப்பிடறோம் அப்படிங்கற மாதிரி, எதுல சாப்பிடறோம்ங்கறதும் முக்கியம்னு சொல்லுவாங்க. அதனால விருந்துன்னாலே வாழை இலைதான்! ஆனால் இப்போ நம்ம ஊர்களிலயே ஏதாவது விசேஷம்னாலோ, கல்யாண வீட்டுக்குப் போனாலோ தான் நாம, வாழை இலையிலயே சாப்பிடறோம்.


எங்கப் பாட்டி வாழை இலையில சாப்பிடறது பத்தி ஒரு கதை சொல்லியிருக்காங்க. " ஒரு முறை பரத்வாஜ முனிவர் வீட்டுல ராமன் சாப்பிடும்போது, அவருக்குப் பார்க்காமல் உதவிய அனுமனுடன் ஒரே இலையில் சாப்பிட்டாராம். அணில் முதுகில் போட்ட கோடு மாதிரி, வாழை இலையின் நடுவுல இருக்குற கோடும் ராமன் இலையை இரண்டு பகுதியாக பிரிக்குறதுக்கு தனது கையால் போட்டக் கோடுதானாம். இலையின் ஒரு பகுதியில் மனிதர் விரும்பி சாப்பிடும் உணவு வகையும், எதிர்ப்பகுதியில் குரங்குகள் விரும்பும் காய்கறிகளும் பரிமாறப்படுவதற்கு இதுதான் காரணமாம்.


" அதேபோல, வாழை இலையில எப்படி உணவு பரிமாறணும்னும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. " இலையின் நுனிப்பகுதி இடதுபக்கமாகவும், அகலமான பகுதி வலதுபக்கமாகவும் இருக்கணும். உடலில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு, காய்கள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் பரிமாறணும். அதேபோல, முற்றிய இலையைவிட தளிர் இலைதான் நல்லது.


இலை கருகுகிற மாதிரி, உணவு சூடாக இருக்கக் கூடாது; சுத்தமாக ஆறியும் இல்லாமல் மிதமான சூட்டில் பரிமாறணும். முதலில் பசியைத் தூண்டும் பருப்பு, நெய் விடணும். அப்புறம் காரவகைக் குழம்புகளை ஊற்றணும். உணவின் செரிமானத்துக்கு உதவும் மல்லி, பூண்டு, மிளகு உள்ள ரசம், தொடர்ந்து புளிப்பு சுவையுள்ள மோர் வழங்கணும். கடைசியா ருசிக்குப் பாயசம்" இப்படி ஒரு முறையே இருக்கு.


ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலகூட வாழை இலை பெரிதும் பயன்படுது. "அல்சர், குடல் நோய்கள் வராமல் தடுக்க கைகண்ட மருந்து வாழை இலையில தொடர்ந்து சாப்பிடறதுதான். சிறுநீரகப்பிரச்சனை, அலர்ஜி, உடலில் இருக்குற நச்சுத்தன்மை நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் வாழை இலையில சாப்பிடறதுதான். வாழை பதினெட்டு வகைகள் இருக்கு. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவகுணங்கள் உண்டாம்".


வாழை இலையில சாப்பிடறதே குறைஞ்சுட்டு வருகிற இந்தக்காலத்துல, இவ்வளவு பெருமையாக பேசுற, வாழை இனமே அழிஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம நாட்டுக்கேயுரிய பாரம்பரிய ரகங்களான சிறுமலை வாழை, பூவன், கற்பூர
வாழை இப்படிப் பலரக வாழைகளும் ஒரேயடியாக அழிஞ்சுக்கிட்டிருக்காம். வாழை இலைகள் பதப்படுத்தப்பட்டு சருகாகவும், 'தொன்னை' அப்படிங்கற சிறுகிண்ணங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருது. என்னதான் இப்படிப்
பயன்படுத்தினாலும் பச்சை இலையில சாப்பிடறமாதிரி இருக்குறதில்லை.


இவ்வளவு மகத்துவம் இருக்கிற வாழை இலை, இன்னைக்கு ஒரு பூட்டு, அதாவது ஐந்து இலைகள், 10லிருந்து 15ரூபாய் வரை விற்கப்படுது. டெல்லியில போன பொங்கலுக்கு, இலையில சாப்பிடலாம்கிற ஆசையில, என் கணவரை வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரே ஒரு இலைதான் இருந்ததுனு வாங்கிட்டு வந்தார்.


அதுவும் ஐந்து ரூபாய்னு சொன்னதும் அதிர்ந்தே போயிட்டேன். ஒரு பூட்டு இலை 5ரூபாய்க்கு விற்ற காலம் போய் ஒரு இலை 5ரூபாய்க்கு விற்கப்படுது. எவ்வளவு அநியாயமா இருக்கு? என்னைக்காவது இலையில சாப்பிடற ஆசையும் கூட இதனால போயிடுது. டெல்லியிலயே இந்த நிலைமை என்றால், வெளிநாடுகளில் இருக்குறவங்களெல்லாம் வாழை இலையில சாப்பிடறதுக்கு ஆசையே பட முடியாது போல!


ஸ்மார்ட் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்!

 http _www.mobileswall.com_ 

டெஸ்க்டாப்பில் கூட பழைய வால்பேப்பரை புதிப்பிக்காமல் அப்படியே வைத்திருக்கலாம் தப்பில்லை! ஆனால் கையிலேயே வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் ஒரே வால் பேப்பரை வைத்திருந்தால் போரடித்து விடாது. அது தான் ஸ்மார்ட் போனில் விரும்பிய போதெல்லாம் வால் பேப்பரை மாற்றிக்கொள்ளும் வசதியை தருகிறது மொபைல்ஸ் வால் இணையதளம்.

ஏதோ புகைப்பட கண்காட்சியை பார்ப்பது போல இந்த தளம் அழகான புகைப்படங்களாக காட்சி அளிக்கிறது. எல்லாமே செல் போனில் வால் பேப்பராக டவுண் லோடு செய்வதற்கானவை. வரிசையாக ப‌டங்களை பார்த்து விட்டு தேவையான படத்தை கிளிக் செய்து ஸ்மார்ட் போன் திரைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

ஆப்பிலா, ஆன்ட்ராய்டா, வின்டோசா இவற்றில் எந்த மாதிரி என நம்மிடல் உள்ள போனுக்கு ஏற்ற வடிவில் தேர்வு செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். 640-Smiley-Face-lஅவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய் வசதியாக படங்களை இயற்கை காட்சிகள், இசை, சினிமா, விலங்குகள் என பலவிதமான தலைப்புகளின் கீழ் பார்க்கும் வசதியும் இருக்கிறது.

எல்லா படங்களுமே ரசிக்கவும் வியக்கவும் வைக்கின்றன. இந்த ரசனையை கருத்தாக தெரிவிக்கலாம். அப்படியே டிவிட்டர் ,பேஸ்புக் வழியே பகிர்ந்து கொள்ளலாம்.

இணையய‌தள முகவரி:  http://www.mobileswall.com/

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி!

 http _www.coolphototransfer.com_ 

கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.

இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.
அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.

இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது. உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.

இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.

டவுண்லோடு செய்ய:http://www.coolphototransfer.com/

3டி தொழில்நுட்ப உதவியுடன் சர்ஜரி!- அசத்தும் லண்டன் மருத்துவர்கள்!

 

பொதுவாக மனித மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன என்ற கேள்விதான் மருத்துவ உலகின் மில்லியன் டாலர் கேள்வியாக நேற்று வரை இருந்தது. நியூரான்களின் உதவியோடு நினைவு களை சேமித்து வைத்து கொள்கிறது மூளை. இதில் சிக்கலான நரம்பு முனைகளின் வலை பின்னலை நேரடியாக கண்டறிய முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது.


அதற்கு விடை கிடைக்கும் வகையில், மூளையில் நினைவுகள் பதிவாவதை ஒளிரும் துணுக்குகளைக் கொண்டு அதை 3டி படமாக காட்டி விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்தனர்.கடந்த ஜூலையில்.அமெரிக்க விஞ்ஞானி டான் அர்னால்டு இதை சாதித்து காட்டிய நிலையில் விபத்தில் சீர்குலைந்த முகத்தை 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீர்படுத்தும் நவீன சிகிச்சை முறையை லண்டன் மருத்துவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.


ஸ்வன்சீஸ் மருத்துவமனையின் அட்ரியன் சுகர் தலைமையிலான மருத்துவர் குழு இந்த முயற்சியில் சாதித்துள்ளது. சமீபத்தில், பைக் விபத்தில் முகம் சிதைந்த நிலையி்ல் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அவருக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முகம் சீராக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் தலைப்பகுதி, ஒரு கருவி மூலம் 3டி முறையில் படம் பிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், முகம் சீரமைக்கப்படுகிறது.


இது குறித்து மருத்துவ குழுவின் ஈவான்ஸ் கூறுகையில், :நாங்கள் வழக்கமான அறுவை சி்கிச்சை முறையை தான் பின்பற்றுகிறோம். ஆனால், புதிய தொழில்நுட்பம் மூலம் முக சீரமைப்பை துல்லியமாகவும், விரைவாகவும் செய்ய முடிகிறது,’ என்றார்.

பழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே!

மூன்று ஆண்டுகளுக்கு தங்கம் வாங்காதீர்கள் என மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுப்பது ஒருபக்கமிருக்க, உங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை தந்து சுத்தமான தங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்யத் தொடங்கி இருக்கின்றன நகைக் கடைகள். இதற்கு போனஸும் கிடைக்கும் என்பது எக்ஸ்ட்ரா கவர்ச்சி. நகைக் கடைகள் பழைய தங்கத்தை வாங்குவதற்கு என்ன காரணம்? ஏன் போனஸ் தருகிறது? இதனால் மக்களுக்கு லாபமா, நஷ்டமா?

''நாம் அளவுக்கதிகமாக தங்கம் இறக்குமதி செய்ததால், நம் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி பெரிய அளவில் குறைந்தது. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ஏகத்துக்கு உயர்ந்தது. இதைத் தடுக்கும்விதமாக தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. 2 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியானது, கடந்த 18 மாதங்களில் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் தங்கத்திற்கான மார்ஜின் தொகை முழுவதையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்கமுடியும் என வங்கிகளும் கட்டுப்பாடு விதித்தன. முழுத் தொகையும் செலுத்த அதிகமான பணம் தேவை. இதனால் நகைக் கடைகள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன. இதன் விளைவாக நகைக் கடைகள் தங்கம் இறக்குமதி செய்யும் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் 162 டன் இருந்த தங்கத்தின் இறக்குமதி ஜூன் மாதத்தில் 38 டன்னாக- குறைந்தது. தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நகைக் கடைகள் தேவையான தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டன. இதற்கு காரணம், இந்திய வீடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தத் தங்கத்தில் 10 சதவிகித தங்கத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கினால்கூட போதும் என நகைக் கடைகள் நினைக்கின்றன.

இதனால் பழைய தங்கத்தை சுத்தமான 916 தங்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். அதோடு பழைய தங்கத்திற்கு போனஸும் தருகிறோம் என்று விளம்பரம் செய்கின்றன. இப்படி போனஸ் தருவதால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.

பழைய தங்கத்தை விற்கும்போது நகைக் கடைகள் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கழித்துவிடுகின்றன. இதனால் பழைய தங்கத்தை அன்றைய விலையில் எடுத்துக்கொண்டால்கூட உங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பில் ஒரு சில சதவிகிதத்தைக் குறைத்துதான் மதிப்பீடு செய்வார்கள். இப்படி கழிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு என்பது உங்களுக்கு கொடுக்கும் போனஸ் தொகை மதிப்பைவிட அதிகமாக இருக்கும். நகைக் கடைகள் அதிகபட்சம் ஒரு கிராமிற்கு 100 ரூபாய் போனஸ் தரும். ஆனால், ஒரு கிராமிற்கு 250 ரூபாய் வரை  நகைக் கடைகள் லாபம் பார்க்க முடியும். நகைக் கடைகள் இப்படி செய்வதன் மூலம்  கடைகளில் இருக்கும் நகைகளும் குறையும். இதனால் வியாபாரமும் நடக்கும்.

மேலும், தங்க இறக்குமதியைக் குறைக்க தங்க காயின்கள், பார்கள் விற்கக் கூடாது என அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனாலும் நகைக் கடைகளுக்குதான் லாபம். ஏனெனில் காயின், பார்கள் விற்கும்போது குறைந்த அளவில்தான் சேதாரம் வசூலிக்க முடியும். இப்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள் ஆபரணமாகவே வாங்கும் கட்டாயத்தில் இருப்பதால் நகைக் கடைகளுக்கு லாபம்தான்.

சில நகைக் கடைகள் கள்ளச் சந்தையில் தங்கத்தை வாங்கு கின்றன. இப்படி வாங்கும் தங்கம் கணக்கில் வராது என்பதால் வரி எதுவும் கட்டுவதில்லை. இதனை கணக்கில்கொண்டு வருவதற்கும் பழைய தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிடுகிறார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களுக்கு தேவை இருந்தால் மட்டுமே பழைய தங்கத்தை விற்று புதிய தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளுங்கள். கல் வைத்த நகைகளை மாற்றும்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவே செய்யும். முடிந்தவரை ஏற்கெனவே நகை வாங்கிய கடைகளிலே திரும்பத் தந்து, புதிய தங்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்'' என்றார்.

ஏ.டி.எம் - பாதுகாப்பாக பணத்தை கையாள சில டிப்ஸ்கள்!

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத் தரும் ஏ.டி.எம், இந்த அவசர யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருப்பது இயற்கைதானே? நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தை கையாள உதவும் வகையில் சில டிப்ஸ்கள்

தனியே... தன்னந்தனியே..!

அகால நேரங்களிலோ, மிகவும் தனிமையாக நீங்கள் இருக்கும் நிலை ஏற்படும்போதோ ஏ.டி.எம்-மைத் தவிருங்கள். கொஞ்ச நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை... வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம்-களை தேர்ந்தெடுங்கள். ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் வசதி கொண்ட பூத்களை இரவு நேரங்களில் தவிருங்கள். ஏ.டி.எம்-மைப் பயன்படுத்தும் ஆரம்ப காலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.

கணக்கு எங்கே...  கார்டு அங்கே!

முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்-மைப் பயன்படுத்துவதே சிறந்தது. சில சமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பணம் வராமல், தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.

கார்டை விட்டு கண்ணைத் திருப்பாதீர்கள்!


பெரிய கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களிலும், பெட்ரோல் பங்குகளிலும் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாகத் தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இது சம்பந்தபட்ட ஊழியர்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் சிலரும் சேர்ந்து செய்திருக்கும் தில்லாலங்கடி ஏற்பாடு. இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு, ஒரு போலி கார்டைத் தயாரித்துப் பணத்தை லவட்டிவிடுவதுண்டு. எனவே, ஊழியர்கள் கார்டைத் தேய்க்கும்போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்கட்டும்.

கார்டு... கைப்பை... கவனம்!

 சில ஏ.டி.எம் மெஷின்களில் கார்டை நுழைத்ததுமே சரிபார்க்கப்பட்ட பிறகு கார்டை வெளியே எடுத்துவிடலாம். சில மெஷின்களில் நீங்கள் பணம் எடுத்து முடியும் வரை கார்டு மெஷினுக்குள்ளேயே இருக்கும். அப்படிப்பட்ட மெஷின்களிடம் எச்சரிக்கை தேவை. பணத்தை எடுத்துக் கொண்டு கார்டை எடுக்கப் பலர் மறந்துவிடுகிறார்கள். அதேபோல கைப்பை மற்றும் இதர பொருட்களை ஏ.டி.எம் அறையிலிருந்து வரும்போது கவனமாகத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்.

'பின் நம்பர்' மறையுங்கள்!

ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கும்போது, ரகசிய எண்களை (பின் நம்பர்) அழுத்துவீர்கள் அல்லவா? அப்போது இயன்ற வரை ஒரு கையால் அழுத்துப் பலகையை மறைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அழுத்துங்கள். சில இடங்களில் உங்கள் ரகசிய எண்ணைக் கேமிரா மூலம் படம் எடுத்து மோசடி செய்பவர்களும் இருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியாமல், உங்கள் உடம்பையே ஒரு கேடயமாக உபயோகித்தும் ரகசிய எண் அழுத்துவதை மறைக்கலாம்.

கூரியரிலும் நடக்குது காரியம்!

 உங்கள் ரகசிய எண் கொண்ட விவரங்களைக் கூரியர் மூலம் வங்கியில் இருந்து அனுப்புவார்கள். சில எத்தர்கள், கூரியர் நிறுவன ஊழியர்களை சரிக்கட்டி விவரங்களைத் தெரிந்துகொண்டு, கவரை மீண்டும் ஒட்டி டெலிவரி செய்துவிடுவதுண்டு. கிடைத்த விவரங்களைக் கொண்டு போலி கார்டு தயாரித்து, எப்போது கணிசமான தொகை சேருகிறதோ அப்போது பணத்தை எடுத்து விடுவார்கள். கூரியர் வழியாக ஏ.டி.எம் கார்டு கிடைத்த உடனேயே ரகசிய எண்ணை மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

பின் நம்பர் பாதுகாப்பு... ரொம்ப முக்கியம்!

ரொக்கப் பணத்தைப் போல, காசோலைப் புத்தகத்தைப் போல ஏ.டி.எம் கார்டும் முக்கியமானது. மிகவும் பாதுகாப்பாக வைத்திருங்கள். பின் நம்பரை வேறு யாருக்கும் தெரிவிக்காதீர்கள். குறைந்தது இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது பின் நம்பரை மாற்றுங்கள். தொலைபேசியிலும் இ-மெயிலிலும் உங்கள் ஏ.டி.எம் எண்ணை யாருக்கும் ஒருபோதும் அளிக்காதீர்கள். ஏ.டி.எம் கார்டிலோ... உங்கள் பர்ஸிலோ பின் எண்ணை எழுதி வைக்கக் கூடாது.

பிறர் கண்பட எண்ணாதீர்கள்!

ஏ.டி.எம் மெஷின் தரும் பணத்தை வெளியில் நிற்பவர்கள் பார்க்கும்படி சரிபார்த்து எண்ணாதீர்கள். நிதானமாகப் பாதுகாப்பான இடத்துக்குப் போய் எண்ணுங்கள். எண்ணி முடித்ததும் பாதுகாப்பாகப் பணத்தைப் பத்திரப்படுத்துங்கள்.

செயல்பாட்டை முடக்குங்கள்!

ஏ.டி.எம் கார்டு தொலைந்துபோனால் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்புகொண்டு ஏ.டி.எம் கார்டின் செயல்பாட்டை முடக்குங்கள். பிறகு, முறைப்படி வேறு கார்டு பெற நடவடிக்கை எடுங்கள்.

தயார் நிலை அவசியம்!

ஏ.டி.எம் மெஷினை அடைவதற்கு முன்னரே கைப்பை அல்லது பர்ஸில் இருந்து கார்டை எடுத்துத் தயார் நிலையில் கையில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து விடுங்கள். முடிந்த மட்டும் ஒரே மெஷினைப் பயன்படுத்தும்போது பயன்பாடு எளிதாகவும் விரைவாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

முட்டை வெந்துவிட்டதா ? அறிந்து கொள்ள எக் டைமர் !!


சமையலறையில் பல புதிய விஷயங்கள் புகுந்துவிட்டன. ஆனால் அது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அதுபோன்ற விஷயங்களைப் பற்றி பார்த்ததில் எக் டைமர் தான் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே அது பற்றி ஒரு கண்ணோட்டம்…

பொதுவாக உணவு பொருளை நாம் பாத்திரத்தில் வேக வைக்கும் போது அது வெந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள, அதனை கையால் நசுக்கிப் பார்ப்போம். அது நசுங்கினால் வெந்துவிட்டதை அறிந்து கொண்டு இறக்கிவிடுவோம்.

அதே போல குக்கரில் வேக வைக்கும் போது உணவு பொருளுக்கு ஏற்ப விசில் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அடுப்பை அணைத்து விடுவோம். ஆனால் இதில் எல்லாம் கண்டு பிடிக்க முடியாத ஒரு வகை உணவு பொருள்தான் முட்டை. ஆம். அழுத்திப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. குக்கரிலும் வேக வைக்க முடியாது. எப்படித்தான் முட்டை வேகும் நேரத்தை சரியாக கண்டுபிடிப்பது?

இதென்ன பெரிய விஷயமா? 10 நிமிடம் அல்லது முட்டை ஓடு உடைந்தால் முட்டை வெந்து விட்டதாக அர்த்தம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், முட்டை சரியாக வெந்துவிட்டதா என்பதை கண்டறிய ஒரு சாதனம் உள்ளது. அதுதான் எக் டைமர்.

முட்டை வேக வைப்பதை கண்டுபிடிக்க ஒரு சாதனமா என்று வியக்காதீர்கள். அதிலும் எத்தனையோ வகை உள்ளது என்பது தான் விஷயமே. டிஜிட்டல் டைமர், ஹவர்கிளாஸ் வகை என பல வகைகளில் உள்ளது. டிஜிட்டல் டைமர் என்பது முட்டை வேகும் நேரத்தை டிஜிட்டல் கடிகாரம் போல கணிக்கிறது. ஹவர்கிளாஸ் வகையில், அதில் உள்ள மணல் போன்ற துகள், கீழுள்ள குவளையில் விழுவதைக் கொண்டு முட்டை வேகும் நேரத்தை கணித்துக் கொடுக்கிறது. முட்டையைப் போன்றே வடிவமுள்ள ஒரு சாதனமும் வந்துவிட்டது. அதனை வேக வைக்கும் முட்டையுடன் போட்டுவிட வேண்டுமாம். அது நிறம் மாறியதும் முட்டை வெந்துவிட்டதாக அர்த்தமாம்.

கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் (card skimming) என்றால் என்ன?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.

சமீப காலத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய ஏராளமான மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவற்றுள், கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மோசடி, சர்வசாதாரணமாக அடிக்கடி நிகழும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்டு ஸ்கிம்மிங் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு காந்தப் பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்து கொள்ளும் ஒரு மோசடி செயலாகும். இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள் மற்றொரு வெற்றுக் கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கோ சட்டவிரோதிகளால் உபயோகிக்கப்படுகின்றன.

எவ்வாறு கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது?

பொதுவாக, அசல் கார்டு ரீடருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் போலி ரீடரைக் கொண்டு, தேய்க்கப்படும் கார்டுகளில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய போலி ஸ்கிம்மிங் சாதனங்கள், பெரும்பாலும் கையில் பிடித்துக் கொள்ளக்கூடியதான பின்பேட்கள் மற்றும் ஏடிஎம்கள் போன்ற இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. மேலும் ஒற்றையாக, கையடக்கமாக மற்றும் பாண்ட் பாக்கெட்டில் அடங்கி விடக்கூடியதாக இருப்பதனால், இச்சாதனத்தை பல்வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்வது மிகவும் எளிது.


தப்பிக்க வழிகள்!!


இத்தகைய மோசடிகளை அறவே தவிர்ப்பது மிகக் கடினமான காரியமே; என்றாலும் கார்டுஹோல்டர்களுக்கு உதவக்கூடிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றைக் கடைபிடிப்பதின் மூலம் இத்தகைய மோசடிகளின் விஸ்தீரணத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.


பில்களை நேரடியாக செலுத்துங்கள்


உங்கள் பில்களை செலுத்துவதற்கு, உங்கள் பிளாஸ்டிக் பணக் கார்டுகளை ஏதேனும் சர்வர்களிடம் கொடுத்து விடாமல், நேரடியாக நீங்களே விற்பனை கூடத்திற்கு சென்று கார்டு மூலம் உங்கள் பில்லுக்கான தொகையை செலுத்துங்கள்.


ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறை


எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முற்படுகையில், உங்கள் கைகளைக் கொண்டு சாதனத்தை நன்கு மூடியுள்ளீர்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பின்-ஹோல் காமிராக்களோ அல்லது உங்கள் தோள் வழியாக எட்டிப் பார்க்கும் ஸர்ஃபரோ உங்கள் பின் நம்பரைப் பார்த்துக் குறித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.


எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்


எந்தவொரு வணிக மையத்தின் பேமெண்ட் கவுன்ட்டரில் ஏடிஎம் கார்டை கொடுத்து வாங்கும் போதும் உங்கள் கார்டின் மேல் தனி கவனம் இருக்கட்டும்.



வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளை சரி பார்த்தல்


கார்டு ஸ்கிம்மிங் மற்றும் அதனை ஒத்த இதர மோசடிகள் அனைத்தும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. கார்டு தொடர்பான ஸ்டேட்மெண்ட்டுகளை சீரான இடைவெளிகளில் சரி பார்ப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.


போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் நீங்கள் ஏதேனும் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் அல்லது பின்பேடை எங்கேனும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதனைப் பற்றி உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல்துறைக்கு உடனே தெரிவிக்கவும்.


புதிய சிப்- ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் கார்டு ஸ்கிம்மிங் சம்பவங்களை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ, வர்த்தகத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளை காந்த பட்டை உடைய கார்டுகளுக்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான சிப்-அடிப்படையிலான கார்டுகளை நவம்பர் 30, 2013 -க்குள் மாற்றும்படி அறிவுறுத்தி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. காந்தப் பட்டையை தன் பின்புறத்தில் கொண்டுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கார்டுகளைப் போலல்லாமல், உட்பதிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைக் கொண்டிருக்கும், இந்த புதிய சிப்-அடிப்படையிலான கார்டுகளை, இயந்திரத்தின் உள்ளே முழுக்க செலுத்திய பின்னரே, எந்த ஒரு ட்ரான்ஸாக்ஷனை செயல்படுத்துவதற்கும், கார்டுஹோல்டர் தன் பாதுகாப்பான 4-இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டியிருக்கும்.

கூகுள் புரொஜெக்ட் லூன் தொடர்பில் மற்றுமொரு தகவல்!




எந்தவொரு தருணத்திலும் தடங்கலற்ற இணைய சேவையை வழங்கும் முகமாக கூகுள் நிறுவனம் புரொஜெக்ட் லூன் எனும் சேவையை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

பறக்கும் பலூன்கள் மூலம் Wi-Fi தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இணைய இணைப்பினை வழங்குதலே இச்சேவையின் நோக்கமாகும்.

இதேவேளை இச்சேவையில் பங்குகொள்ளும் ஒவ்வொரு பலூனும் 100 நாட்களில் பூமியை 3 தடவைகள் சுற்றிவரும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த பலூன்கள் எந்தவொரு காலநிலையையும் தாங்கும் வகையில் பொருத்தமான ஊடகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு!

மனிதர்களுக்கு பல சிக்கலை ஏற்படுத்துவது மலச்சிக்கல் நோயே. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மூலநோய் இருக்கும். வயிற்று தொந்தரவுகள் இருந்தால் மனதில் தெம்பு இருக்காது. பணிகள் செய்ய சுறுசுறுப்பு இருக்காது. ஏராளமான குறைகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு மிக சாதாரண மருந்து உள்ளது. முருங்கை கீரை பொரியலை சற்று அதிகமாக எடுத்து கொண்டாலே போதும். இரவு உணவு சாப்பிடும்போது, சோறு பாதி, முருங்கை கீரை பாதியாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே இருக்காது. எவ்வித தொந்தரவும் இல்லாமல் இலகுவாக மலம் வெளியேறும்.

வெளி மூலம்:


முருங்கை இலையும், முத்து என்னும் சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும். மூலம், பௌத்திரம் (பகந்தரம்) நோய் குணமாக முருங்கை கீரை 2 பங்கு, ஊமர்த்தன் இலை 1 பங்கு ஆகியவற்றை பொடியாக அரிந்து வேப்ப எண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயின் மேல் வைத்துக்கட்டினால் கிருமி, பௌத்திரம், நச்சு தண்ணீர் வடியும் பௌத்திரம், நீண்ட நாள்கள் உள்ள மூலம், பௌத்திரம் தொந்தரவுகள் குணமாகும்.

வாந்தி உண்டாக்க:

சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை இயல்பாக பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், வாந்தி எடுக்க மருந்து சாப்பிடுதல், பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கிய விதிமுறை ஆகும். இந்த காரத்திற்காகவும், வேறெதேனும் விஷத்தை குடித்த பிறகு அதை வாந்தி மூலம் வெளியே எடுக்க வேண்டும் என்றால், காட்டு முருங்கை இலைச்சாற்றை 36 கிராம் வாயில் ஊற்றி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். முருங்கை இலை சாற்றை வாயில் ஊற்றினாலே வாந்தி வந்திவிடும்.

கர்ப்பம் தரிப்பதற்கு முன்!

before pregnancy

‘உலகிலேயே மிக உயர்ந்த, உன்னதமான பதவி தாய்மை. அன்புதான் அதற்கான சம்பளம்...’ பெருமைக்குரிய இந்தப் பதவிக்கு எல்லாப் பெண்களும் தகுதியுடையவர்களே... அதற்கு முன் தேவை கொஞ்சம் ஆலோசனைகள்... கொஞ்சம் முன்னெச்சரிக்கைகள்...
இவை இரண்டும் இருந்தால், தாய்மைப் பதவிக்காக எந்தப் பெண்ணும் தவிக்க வேண்டியிருக்காது. குழந்தை வேண்டும் என விரும்புகிற பெண்கள், திருமணத்துக்கு முன்பிலிருந்தே கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் மனு லட்சுமி.

திருமணத்துக்கு முன்...


குழந்தைப்பேறு என்பது திருமணத்துக்குப் பிறகு திட்டமிட வேண்டிய விஷயமில்லை. திருமணத்துக்கு முன்பிலிருந்தே, அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாக வேண்டும். அதாவது, திருமண வயதில் இருக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பே மகப்பேறு மருத்துவரை சந்திக்கலாம். குறிப்பாக முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், தைராய்டு, நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து, இந்தப் பிரச்னைகளை சரியாக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவர்களிடம் எடுத்துக் கொள்கிற ‘ப்ரீமேரி டல் கவுன்சலிங்’கில், தாம்பத்ய உறவு குறித்த அவர்களது பயம், பிரசவ பயம் போன்றவற்றுக்கும் பதில் கிடைக்கும்.

திருமணத்துக்குப் பிறகு...


திருமணமான உடனேயே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிற பெண்களும், ஒருமுறை மகப்பேறு மருத்துவரை சந்தித்து, ரத்தப் பரிசோதனை, கர்ப்பப்பை சோதனை, அதில் ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதற்கான சோதனைகளை செய்வது நலம். இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ரூபெல்லா தடுப்பூசி. ஏற்கனவே இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்குப் பிரச்னையில்லை. ஒருவேளை போடாவிட்டால், கர்ப்பம் தரித்த பிறகு ரூபெல்லா பாதித்தால், தாய்க்குப் பிரச்னை இல்லை. கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைக்குப் பெரிய பாதிப்பு உண்டாகும். இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டு, 1 மாதத்துக்கு கர்ப்பம் தரிக்கக் கூடாது.

முதல் குழந்தையைத் தள்ளிப் போடலாமா?


இது தம்பதியின் வயதைப் பொறுத்தது. குழந்தை பெற்றுக்கொள்ள மிகச் சரியான வயது 20 முதல் 30 வரை. கர்ப்பத்தை தாங்கும் சக்தி, சிக்கல்கள் இல்லாத கர்ப்பமெல்லாம் அந்த வயதில்தான் சாத்தியம். 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், மருத்துவரை அணுகி சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டுக்கான சராசரி சோதனைகளை செய்து, எல்லாம் நார்மல் எனத் தெரிந்தால் குழந்தைப்பேறைத் தள்ளிப் போடலாம்.

30 வயதுக்கு மேல் திருமணம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.

எத்தனை நாள் காத்திருக்கலாம்?


இதற்கும் அதே விதிதான். இள வயதில் திருமணம் செய்தவர்கள் என்றால் ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். அதிலும் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தவர்கள் என்றால் 6 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டாம்.

என்னென்ன சோதனைகள்?


ஏற்கனவே ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கிறதா, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா, மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்கிறதா, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறதா என்பதற்கான பொதுப் பரிசோதனை. சினைப்பை மற்றும் கர்ப்பப்பையில் ஏதேனும் கட்டிகளோ, நீர்க்கட்டிகளோ இருக்கின்றனவா என்பதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்.

நீரிழிவு மற்றும் தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை.  கருக்குழாய்களில் பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஹெச்.எஸ்.ஜி. (ஹிஸ்ட்ரோசால்பினோகிராம்).

கருக்குழாய்களில் ஒன்றிலோ, இரண்டிலுமோ அடைப்புகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் சோதனை.

கருத்தரிக்காததற்கான பிரச்னைகள்...


மேலே சொன்ன சோதனைகளில் எதில் பிரச்னைகள் இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் தாமதமும், பிரச்னைகளும் ஏற்படலாம். தவிர, கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தாலோ, சதை வளர்ச்சி இருந்தாலோ, கர்ப்பப்பை வடிவம் மாறியிருந்தாலோ, கணவருக்குப் பிரச்னைகள் இருந்தாலோ கருத்தரிப்பது தாமதமாகும். இவற்றையெல்லாம் தாண்டி, காரணத்தை விளக்க முடியாத மலட்டுத்தன்மை என ஒரு பிரிவும் உண்டு.

என்ன சிகிச்சைகள்?

ஐ.யு.ஐ.

சாதாரணமாக 15 மில்லியனாக இருக்க வேண்டிய கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை, 8 முதல் 10 மில்லியனாக இருந்தாலோ, காரணத்தை விளக்க முடியாத மலட்டுத்தன்மையாக இருந்தாலோ, சினைப்பையில் ரத்தக்கட்டிகள் இருந்தாலோ, இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும். பெண்ணின் கருமுட்டையுடன், ஆணின் உயிரணுவை செயற்கையாக இணையச் செய்து, கருத்தரிக்கச் செய்கிற இந்த டெக்னிக்கிற்கு மருத்துவமனையில் தங்கவோ, ஓய்வோ தேவையில்லை. இதில் 10 முதல் 15 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு.

ஐ.வி.எஃப்.

ஐ.யு.ஐ. சிகிச்சையை 4 முதல் 5 முறைகள் முயற்சி செய்து பலனில்லாமல் போனால், அடுத்து ஐ.வி.எஃப். சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். 2 கருக்குழாய்களிலுமே அடைப்புள்ளவர்களுக்குப் பெரும்பாலும் இதுதான் பரிந்துரைக்கப்படும். கருமுட்டை உருவாக ஊசிகள் போடப்பட்டு, 8 முதல் 10 முட்டைகள் வந்ததும், அதிலிருந்து சிறந்தவற்றைத் தேர்வு செய்து, வெளியே வைத்து,  உயிரணுக்களுடன் சந்திக்கச் செய்து, கருவானதும் எடுத்து, கர்ப்பப்பையினுள் வைத்து வளர்க்கப்படும். இதில் 30 முதல் 40 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு. ஒரு முறை சிகிச்சைக்கே ஒன்றரை லட்சம் செலவாகும்.

ஐ.எம்.எஸ்.ஐ.


ஐ.வி.எஃப். சிகிச்சையின் அடுத்தகட்ட முன்னேற்றம் இது. ஆரோக்கியமான உயிரணுக்களைத் தேர்வு செய்து, பெண்ணின் கருமுட்டையை சந்திக்கச் செய்கிற சிகிச்சை இது.

கர்ப்பம் தரிப்பதற்கு முன்..
.

உங்கள் பி.எம்.ஐ. (உயரத்துக்கேற்ற எடை உள்ளதா என்பதற்கான பாடி மாஸ் இன்டக்ஸ்) சரியாக உள்ளதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதிக எடை இருந்தால் உடனடியாகக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், மாத்திரைகளுக்குப் பதில் இன்சுலினுக்கு மாறலாம். பெரும்பாலான நீரிழிவு மாத்திரைகள், கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள உகந்தவை அல்ல.

வலிப்பு நோய் உள்ளவர்களும் கர்ப்பம் தரிப்பதற்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளின் அளவும் வீரியமும் குறைவான வேறு மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

புராதன சின்னமாகிறது திருமால்கோனேரி மலை! ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்!


 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமால்கோனேரி மலை புராதன சின்னமாக தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், சமணர்களின் வாழ்வு நிலை, ஓவியங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன. இம்மலைகளை கண்டறிந்து தொல்லியல் துறை புராதன சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருமால்கோனேரி மலை தொல்லியல் துறையால் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த மலையில் 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், தமிழீ எழுத்துக்கள் (அப்போதைய தமிழ் எழுத்து வடிவம்), 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களின் மந்திரமாக இருந்த ஸ்வஸ்திக் சின்னம், சமணர் படுக்கைகள், விளக்குத்தூண் என பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழீ எழுத்துகளில் சமண படுக்கைகளை செய்து கொடுத்தவரின் பெயர் ‘எரு காட்டுஊர் கோன் கொன்றி பாளிய்’ என எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகிழ்ச்சி நிலையில் கைகோர்த்து ஒரு காலை மடித்து உட்கார்ந்திருக்கும் சிற்பம் குடவரை சிற்பமாக காண கிடைக்கிறது.

இம்மலை தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட தகுதியுள்ளது என மதுரை மண்டல அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக அரசிற்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாரம்பரிய சின்னங்களிலேயே சிறப்பு வாய்ந்தது திருமால்கோனேரி மலை. இங்கு கி.மு.க்கு முற்பட்ட ஓவியங்களும், கி.பி.யில் வரையப்பட்ட ஓவியங்களும் ஒருங்கே அமைந்துள்ளன.

 இங்கு மட்டும்தான் சமண படுக்கையின் மேல் சமணர்களின் சின்னமான ஸ்வஸ்திக் உள்ளது. தமிழகத்தில் உள்ள சமணர் படுக்கைகளில் வேறு எங்கும் இச்சின்னம் இல்லை. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வாணிப வழித்தடமாக இருந்ததற்கான சான்றும் உள்ளது. அந்த காலத்தில் குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

குடவரை கோயிலை ஒட்டி 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள பாகம்பிரியாள் சமேத மலைகொழுந்தீஸ்வரர் கோயில் சுவர் முழுவதும் பழமையான தமிழ் எழுத்துக்கள், வட்டெழுத்துக்களை காணலாம். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் வருகிறது. அதனால் மலை முழுவதையும் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இயலாத நிலை உள்ளது. கோயிலை தவிர்த்து மலை, பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றுலாத் துறையுடன் இணைந்து மேம்பாட்டு பணிகள் விரைவில் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும் செல்போன் வழி பரிமாற்றம் !


சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் நாளை அறிமுகம் செய்கிறது.

 தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச் சேவை தற்போது தமிழகத்திலும் நடைமுறைக்கு வருகிறது. தபால் துறையின் தென் மண்டலத்தில் 95 தபால் நிலையங்களிலும், அதில் மதுரை கோட்டத்தில் 32 தபால் நிலையங்களிலும் இச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

 செல்போன் வழி பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த விரும்புவோர், இச் சேவை வழங்கும் தபால் நிலையத்தில் பணத்துடன் தங்களது செல்போன் எண்ணையும், பணம் அனுப்ப வேண்டியவரின் முழு முகவரி, செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

 பணம் பெறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் விவரம் பணம் அனுப்புவருக்கும், பணம் பெற வேண்டியவருக்கும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பி வைக்கப்படும். அதில் பணப் பரிமாற்ற குறியீட்டு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். மேற்படி எஸ்.எம்.எஸ். பெறப்பட்ட நபர், அருகில் உள்ள தபால் நிலையத்தில் பணப் பரிமாற்ற குறியீட்டு எண்ணுடன் கூடிய குறுந்தகவலைக் காண்பித்து பணம் பெற்றுக் கொள்ளலாம். பணம் பெற வேண்டிய நபர் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் அடையாள அட்டையுடன் சென்று தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு பரிமாற்ற குறியீட்டு எண்ணுடன் வந்துள்ள குறுந்தகவலைக் கொண்டு வருவது அவசியம்.  இப்போது நடைமுறையில் இருக்கும் மணியார்டரில் தபால்காரர் வீட்டுக்கே வந்து பணம் கொடுப்பார். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பணத்தைப் பெற முடியும். தபால்காரருக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

புதிய சேவையில் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் பெற்றுக் கொள்ளலாம். அதோடு, பணம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.  மணியார்டர் அனுப்பும்போது ரூ.100-க்கு ரூ.5 கமிஷன் தொகையாகப் பெறப்படுகிறது. செல்போன் வழி பண பரிமாற்றத்தில் ரூ.1000 முதல் ரூ.1,500 வரை ரூ.40, ரூ.1501 இல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை ரூ.70, ரூ.5,001 இல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை ரூ.100 மற்றும் சேவை வரி சேர்த்து கமிஷன் தொகையாக பெறப்படும். இது மணியார்டருக்கான கமிஷன் தொகையைக் காட்டிலும் குறைவாகும்.

 அனுப்பிய தொகையை இரு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் 15 ஆவது நாள், அனுப்பப்பட்ட தபால் நிலையத்திற்கே பணம் திரும்பச்சென்றுவிடும். பணம் அனுப்பிய நபர் அங்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

 தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இச்சேவையை, மதுரையில் அரசரடி, மதுரை, தல்லாகுளம் ஆகிய தலைமை தபால் நிலையங்களிலும், சில குறிப்பிட்ட துணை தபால் நிலையங்களிலும் பெறலாம். இச் சேவை வழங்கப்படும் தபால் நிலையங்களின் விவரத்தை ஜ்ஜ்ஜ்.க்ர்ல்ம்ர்க்ஷண்ப்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்